Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கையின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தல்

நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமையினைப் பேணும் நோக்குடனும் கொவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சாத்தியமான எதிர்மறையான தாக்கங்களைப் பரிசீலனையில் கொண்டும், இலங்கை மத்திய வங்கியினது நாணயச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் கௌரவ நிதி அமைச்சர், 2020 யூலை 02ஆம் திகதியிடப்பட்ட 2182/37ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளையின் செல்லுபடியாகும் காலத்தினை 2021 சனவரி 02 இலிருந்து மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்து 18.12.2020ஆம் திகதியிடப்பட்ட 2206/25ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் கட்டளையொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, மூலதனக் கொடுக்கல்வாங்கல்கள் மீதான வெளிமுகப் பணவனுப்பல்கள் மீதான பின்வரும் கட்டுப்பாடுகள் 2021 யூலை 01ஆம் திகதி வரை செயற்பாட்டிலிருக்கும்.

முழுவடிவம்

வழிகாட்டல் 2021: 2021 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

2020ஆம் ஆண்டு எம்மில் அநேகமானோர் மிக விரைவில் மறந்துவிட வேண்டி விரும்புகின்றதொரு காலமாகும். ஏனெனில் இது பிரதானமாக கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலுமுள்ள மனித இனத்தின் மீது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தியிருந்ததாலாகும். தற்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று, உலகப்போர்-II இன் பின்னரான மிகக் கடுமையான உலகளாவிய நெருக்கடியொன்றாகும். 2020இன் இறுதி பத்து மாத காலப்பகுதி முழுவதும் நாம் கேட்ட செய்திகளெல்லாம் துன்பம், மரணம், பயம் பற்றியவேயாகும். எமது வாழ்க்கை பெரும் அதிர்வுகளுக்குள்ளாகியிருக்கிறது. நாம் இதிலிருந்து மீண்டு எப்பொழுது வழமையான வாழ்விற்கு திரும்ப இயலுமென தெரியவில்லை. எனினும், புத்தாண்டு எமக்காகக் காத்திருக்கிறது. அத்துடன், மிக விரைவில் சிறந்ததொரு காலம் ஆரம்பமாவதற்கான உண்மையான சில சான்றுகள் காணப்படுகின்றன. 2020இன் துன்பம் நிறைந்த நினைவுகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, விதியைப் பற்றி எவர் எதனைச் சொன்னாலும் எதிர்காலத்தில் நல்லதே நடக்குமென நாம் சாதகமாக உணர்ந்து கொண்டு எம்மைச் சுற்றி நல்ல செய்திகளைப் பரவ விடுவோம்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2020 நவெம்பரில் 4.1 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பு மூலம் இது தூண்டப்பட்டிருந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரின் 10.3 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 9.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 நவெம்பரில் 1.6 சதவீதத்திலிருந்து 2020 திசெம்பரில் 2.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2020 திசெம்பரில் தொடர்ச்சியான மூன்றாவது மாதத்திற்காகவும் 4.6 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக சுற்றோட்டத்திற்கு விடப்படாத ஞாபகார்த்த நாணயக் குற்றியொன்றினை வெளியிடுகின்றது

இலங்கை மத்திய வங்கியானது 1950 ஓகத்தில் அதன் தொழிற்பாடுகளைத் தொடங்கி இலங்கையின் சுபீட்சத்திற்கு அதன் தனித்துவமும் பெறுமதிவாய்ந்ததுமான பங்களிப்பின் 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக இலங்கை மத்திய வங்கி, பின்வரும் முக்கிய அம்சங்களுடன் சுற்றோட்டத்திற்கு விடப்படாத ரூ.20 வகை ஞாபகார்த்த குற்றியொன்றினை வெளியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இலங்கை சுபீட்சச் சுட்டெண் – 2019

இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணானது  “பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்” மற்றும் “சமூக-பொருளாதார உட்கட்டமைப்பு” ஆகிய துணைச் சுட்டெண்களின் சிறிதளவான வீழ்ச்சிகளுடன் 2018இன் 0.811 உடன் ஒப்பிடுகையில் 2019இல் 0.802 ஆகப் பதிவாகியது. அதேவேளை, “மக்கள் நலனோம்புகை” துணைச் சுட்டெண் ஆண்டுகாலப்பகுதியில் மேம்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் தொடர்புபட்ட கைத்தொழில்கள் மீது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் கசிவுத் தாக்கங்கள் தொழிலின்மையில் அதிகரிப்பொன்றினை ஏற்படுத்தியமை அத்துடன் 2019இன் பிந்திய பகுதியை நோக்கிய மோசமான வானிலை நிலைமைகளின் காரணமாக ஒப்பீட்டளவில் உயர்வான பணவீக்கம் என்பன பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணில் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்பு பற்றிய கரிசனைகளின் காரணமாக பொதுப் போக்குவரத்தினைக் குறைவாகப் பயன்படுத்தியமை சமூக-பொருளாதார உட்கட்டமைப்புச் சுட்டெண்ணில் வீழ்ச்சிக்கு முக்கிய ஏதுவாக அமைந்தது.

மக்களின் கல்வி, சுகாதார வசதிகள், செல்வம் தொடர்பான தரம் பற்றிய அம்சங்கள் மக்கள் நலனோம்புகைச் சுட்டெண்ணின் அதிகரிப்பிற்கு முக்கியமாக பங்களித்தவையாக விளங்கின.

வழிகாட்டல்: 2021ஆம் ஆண்டிற்கும் அதற்கும் அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள் பற்றிய அறிவித்தல்

வழிகாட்டல்: 2021ஆம் ஆண்டிற்கும் அதற்கும் அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மூலம் 2021 சனவரி 04ஆம் திகதியன்று அறிவிக்கப்படும்.

தற்போது நிலவுகின்ற கொவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் நிலைமையின் காரணமாக வழிகாட்டல் பற்றிய எடுத்துரைப்பு மெய்நிகராக இடம்பெறும் என்பதுடன் காணொளி 2021 சனவரி 04ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 11.00 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளம் ஊடாகக் கிடைக்கப்பெறும்.

Pages

சந்தை அறிவிப்புகள்