பொதுநோக்கு

இலங்கையின் நிதியியல் துறையில் உச்ச மட்ட நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி விளங்குகின்றது. அரைவாசியளவு சுயநிர்ணயம் கொண்ட நிறுவனமொன்றாக 1950ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி நிறுவிய 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்திற்கு பதிலீடாக 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம் 2023 செத்தெம்பரில் சட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது.

புதிய சட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கியானது சுயநிர்ணயம் கொண்டதும் வகைகூறுவதாகவும் இருக்க வேண்டும். சட்ட ரீதியான ஆளும் தன்மையுடன் காணப்படும் கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றாக, இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் நாணய, நிதியியல் மற்றும் கொடுப்பனவு முறைமைகளின் நிர்வாகத்திற்கு பொறுப்புடையதாக இருக்க வேண்டும். இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், திறைசேரிக்கான செயலாளர் மத்திய வங்கியின் தீர்மானத்தை மேற்கொள்ளும் ஏதேனும் குழுக்களுக்கு பாகமாக இனிமேலும் இருக்கமாட்டார்.

ஆளுநரின் தலைமையில் ஆளும் சபையும் நாணயக் கொள்கைச் சபையும் என்ற இரு சமாந்தரமான தீர்மானம் மேற்கொள்ளும் குழுக்களை புதிய ஆளுகைக் கட்டமைப்பு உள்ளடக்குகின்றது.

  1. ஆளும் சபை - இலங்கை மத்திய வங்கியின் அலுவல்களினது நிருவாகத்தையும் முகாமையையும் மேல்நோக்குகின்ற மற்றும் நாணயக்கொள்கை தவிர மத்திய வங்கியின் பொதுக்கொள்கையைத் தீர்மானிக்கின்ற பொறுப்புடைமை பொறுப்பளிக்கப்பட்டுள்ளது
  2. நாணயக் கொள்கைச் சபை – உள்நாட்டு விலையின் உறுதிப்பாட்டை அடைவதற்கும் பேணவதற்குமென நெகிழ்வான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கையை வகுத்தமைத்தலும் நெகிழ்வான செலாவணி வீதத் தோற்றப்பாட்டை நடைமுறைப்படுத்தலும் இதற்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது

ஒட்டுமொத்தமாக, அதன் முதன்மைக் குறிக்கோள்களுக்குப் புறம்பாக ஆரோக்கியமானதும் உறுதியானதுமான பொருளாதாரத்தினையும் நிதியியல் முறைமையினையும் அடைந்து பேணுகின்ற அதேவேளை மூலவளங்களின் பயன்பாட்டினைக் காத்திரமான முறையில் உச்சப்படுத்தவும் இலங்கை மத்திய வங்கி நாடுகின்றது. ஆகையினால், அதன் புதிய முதன்மை மற்றும் மற்றைய குறிக்கோள்கள்:

  1.      முதன்மைக் குறிக்கோள்: உள்நாட்டு விலை உறுதிப்பாட்டை அடைதலும் பேணுதலும்  - முதன்மைக் குறிக்கோளைப் பின்பற்றுவதில், இலங்கை மத்திய வங்கியானது அதன் இயல்திற மட்டம் தொடர்பில் வெளியீட்டின் நிலையுறுதிப்பாட்டை கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.
  2.      மற்றைய குறிக்கோள்: நிதியியல் முறைமை நிலையுறுதியை உறுதிப்படுத்தல் - மற்றைய குறிக்கோளைப் பின்பற்றுவதில், இலங்கை மத்திய வங்கியானது நிதியியல் முறைமையின் அபிவிருத்தியையும் வினைத்திறனையும் கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், முதன்மை நிறைவேற்று அலுவலராக தொழிற்படுகின்ற அதேவேளை, மூத்த முகாமைத்துவமானது ஆளுநருக்கு மேலதிகமாக  துணை ஆளுநர்கள், உதவி ஆளுநர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது. வங்கியானது 29 திணைக்களங்களையும் 6 பிரதேச அலுவலகங்களையும் உள்ளடக்கியுள்ளது. திணைக்களங்களுக்கு பணிப்பாளர்கள் (அல்லது அவர்களுக்குச் சமமானவர்கள்) தலைவர்களாகத் தலைமை வகிப்பதுடன், அவர்கள்  உதவி ஆளுநரினூடாக ஆளுநருக்கு அல்லது துணை ஆளுநருக்கு அறிக்கையிடுகின்றனர். இலங்கை மத்திய வங்கி, இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார அலுவல்கள்தொடர்பான மதியுரைஞராகவும் வங்கியாளராகவும் விளங்குகிறது.