நாணயக் கொள்கை

 

பொதுநோக்கு

நாணயக் கொள்கை என்பது பேரண்டப் பொருளாதார குறிக்கோளான விலை உறுதிப்பாட்டை அடையும் முக்கிய நோக்குடன் பொருளாதாரமொன்றிலுள்ள பணத்தின் நிரம்பல் மற்றும் செலவை மத்திய வங்கி முகாமைப்படுத்தும் செயன்முறையாகும். 

இலங்கையில் நாணயக் கொள்கையினை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி பொறுப்பாக இருப்பதுடன் இது முக்கியமாக கொள்கை வட்டி வீதங்களை நிர்ணயித்தல் மற்றும் பொருளாதாரத்தில் திரவத்தன்மையினை முகாமைப்படுத்தல் என்பனவற்றுடன் தொடர்புபட்டதாகும். மத்திய வங்கியின் நாணயத் தொழிற்பாடுகள் பொருளாதாரத்திலுள்ள வட்டி வீதங்களில் செல்வாக்கை ஏற்படுத்துவதுடன் கடன்பாட்டாளர் மற்றும் கடன் வழங்குவோர், பொருளாதார நடவடிக்கைகளிலும் இறுதியாக பணவீக்க வீதத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. ஆகவே, மத்திய வங்கி, பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தி அதனை விரும்பத்தக்க பாதையில் பயணிக்கச் செய்ய நாணயக் கொள்கையினை பயன்படுத்துகின்றது.

 

 

பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு

பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாடு என்பது பொருளாதாரத்தில் பொதுவான விலை மட்டத்தில் பரந்தளவு தளம்பல்கள் இல்லாததொரு சூழ்நிலையாகும். இது நீடித்த உறுதியான பொருளாதார வளர்ச்சியை எய்த உதவும். விலைகள் குறைந்த வீதத்தில் தளம்பலடையும் பொழுது அது பொருளாதார முகவர்களான வீடலகுகள் மற்றும் நிறுவனங்களின் பொருளாதாரத் தீர்மானங்களின் மீது குறிப்பிடத்தக்களவில் எந்தவொரு செல்வாக்கினையும் கொண்டிராது. மேலும் விலை உறுதிப்பாடு பொதுமக்களிடையே பணவீக்க எதிர்பார்ப்புக்களைச் சிறந்த முறையில் நிலைநிறுத்த உதவும். இது உண்மையான பணவீக்கத்தினைத் தாழ்ந்த உறுதியான மட்டங்களில் பேணுவதனை இலகுபடுத்தும். ஆகவே, உறுதியான விலைகள், எதனை உற்பத்தி செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பது பற்றிய பொருளாதாரத் தீர்மானங்களை பிறழ்வுபடுத்தாது என்பதனால் பொருளாதாரத்தில் வினைத்திறன் மிக்க மூலவள ஒதுக்கீட்டினை இயலச்செய்து பொருளாதார உறுதிப்பாட்டிற்கும் நீண்ட காலத்தில் பொருளாதாரத்தின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது.

 

 

நாணயக் கொள்கைக் கட்டமைப்பு

தற்பொழுது, மத்திய வங்கியானது நடுத்தர காலப்பகுதியில் நடு ஒற்றை இலக்க மட்டத்தில் சமநிலைப்படுத்த முயற்சிக்கின்ற அதேவேளை பொருளாதார வளர்ச்சியின் ஆற்றலுக்கு ஆதரவளித்து, நெகிழ்ச்சித்தன்மை கொண்ட பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பொன்றுடன் இசைவாக நாணயக்கொள்கையினைப் பேணுகின்றது. இக்கட்டமைப்பின் தொழிற்பாட்டு அம்சங்களின் நியதிகளுக்கமைய மத்திய வங்கி தொழிற்பாட்டு இலக்கிடலாக, குறுங்கால வட்டி வீதங்களுக்கு, குறிப்பாக சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதங்களுக்கு வழிகாட்ட அதன் கொள்கைக் கருவிகளைப் பயன்படுத்துகிறது.

இம்மாற்றத்திற்கு முன்னதாக, மத்திய வங்கி நாணயக் கொள்கையினை நாணய இலக்கிடல் மற்றும் நெகிழ்ச்சித்தன்மை கொண்ட பணவீக்க இலக்கிடல் ஆகிய இரண்டு பண்புகளுடன் விரிவாக்கப்பட்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்பொன்றிற்குள் மேற்கொண்டு வருகின்றது. இவ்விரிவாக்கப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்பின் கீழ் மத்திய வங்கி, நடுத்தர காலப்பகுதியில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டத்தில் சமநிலைப்படுத்த முயற்சிக்கின்ற வேளையில், பொருளாதாரத்தின் வளர்ச்சி உத்வேகத்திற்கும் செலாவணி வீத முகாமைத்துவத்தில் நெகிழ்ச்சித்தன்மைக்கும் ஆதரவளித்து வருகின்றது. தற்போதைய நடைமுறைக்கு ஒத்ததாக சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் தொழிற்பாட்டு இலக்கிடலாக பயன்படுத்தப்பட்டது.

1980களின் தொடக்கப் பகுதியில், மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கைக் கட்டமைப்பாக நாணய இலக்கிடலைப் பின்பற்றியதுடன் நாணயக் கொள்கையை நடத்துவதில் நாணயக் கூட்டுக்கள் முக்கிய பெயரளவு நிறுத்தியாக மாற்றமடைந்தன. நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் கீழ், நாணய வழங்கலில் ஏற்படும் மாற்றங்கள் விலை உறுதிப்பாட்டினைப் பாதிக்கின்ற முக்கிய ஏதுக் காரணிகளாகக் கருதப்பட்டன. பொதுவாக, இலங்கையில் நாணய அபிவிருத்திகளைப் பகுப்பாய்வு செய்கையில் நாணயக் கூட்டுக்களின் இரண்டு முக்கிய வரைவிலக்கணங்கள் பரிசீலனையில் கொள்ளப்பட்டன. முதலாவது யாதெனில், மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயம் மற்றும் மத்திய வங்கியில் வைத்திருக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் வைப்புக்கள் என்பனவற்றை உள்ளடக்கிய “ஒதுக்குப் பணம்”. ஏனெனில் வர்த்தக வங்கிகள் அவற்றின் கொடுகடன் மற்றும் வைப்புக்களை உருவாக்குகின்ற செயன்முறைகளினூடாக பணநிரம்பலின் பரந்த வரைவிலக்கணத்தின் கூறுகளான ஒதுக்குப் பணத்தினை அடிப்படையாகக் கொண்டு வைப்புக்களை உருவாக்க முடியுமாகையால், இது தளப் பணம் அல்லது உயர் வலுப் பணம் எனவும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது யாதெனில், விரிந்த பணம், இது, பொதுமக்கள் வசமிருக்கும் நாணயங்களையும் வர்த்தக வங்கிகளுடன் பொதுமக்கள் வைத்திருக்கும் அனைத்து வைப்புக்களையும் உள்ளடக்கியது என வரைவிலக்கணம் செய்யப்படுகிறது. பணநிரம்பலுக்கும் பொதுவான விலை மட்டத்திற்குமிடையிலான உறவு முறையினைப் பகுப்பாய்வு செய்வதற்கு மிகப் பொருத்தமான நாணய மாறி விரிந்த பணநிரம்பலே என்பதனை ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும் பணநிரம்பலுக்கும் பணவீக்கத்திற்குமிடையிலான பலயீனமான தொடர்புகளுக்கு மத்தியிலும் பணப் பெருக்கியிலும் சுற்றோட்ட வேகத்திலும் உயர்ந்துவரும் தளம்பல்களைக் கவனத்தில் கொள்கையில், பெயரளவு நிறுத்தியொன்றாக நாணய இலக்கிடல்களின் வகிபாகம் நிச்சயமற்றதொன்றாக மாறியிருப்பதுடன் மத்திய வங்கியின் தொடர்பூட்டல் உபாயத்தினையும் சிக்கலாக்கியிருக்கிறது. இது மக்கள் வங்கி தனது நாணயக் கொள்கைக் கட்டமைப்பை விரிவடையச்செய்ய காரணமாக அமைந்தது.

மத்திய வங்கி சிறந்த பணவீக்கப் பாதையினை அடையும் நோக்குடன் அதன் கொள்கை வீதங்களின் மூலம் அதாவது துணைநில் வைப்பு வசதி வீதம் (முன்னாள் மீள்கொள்வனவு வீதம்) மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் (முன்னாள் நேர்மாற்று மீள்கொள்வனவு வீதம்) என்பனவற்றினால் உருவாக்கப்பட்ட வட்டி வீத வீச்சிற்கிடையில் அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பணவீக்கத்தின் விரும்பத்தக்க பாதையொன்றினை அடையும் நோக்குடன், பொருளாதாரத்தின் வட்டி வீத அமைப்பிற்கு வழிகாட்டுவதற்காக, அவசியமானவிடத்து, கொள்கை வீதங்கள் காலத்திற்குக் காலம் மீளாய்வு செய்யப்பட்டு பொருத்தமான விதத்தில் சீராக்கப்பட்டு வருகின்றன.

  

நாணயக் கொள்கை - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்