Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 ஓகத்து

வர்த்தகப் பற்றாக்கையில் ஏற்பட்ட மேம்பாடு, தொழிலாளர் பணவனுப்பல்களில் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பனவற்றின் முக்கிய ஆதரவுடன் 2020 ஓகத்துக் காலப்பகுதியில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அநேக விடயங்களில் தொடர்ந்தும் மீட்சியடைந்திருக்கிறது. இம்மாத காலப்பகுதியில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் வீழ்ச்சி காணப்பட்டமைக்கிடையிலும் இன்றியமையாதனவல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் குறைவடைந்த மசகெண்ணெய் விலைகள் என்பனவற்றின் காரணமாக வணிப்பொருள் இறக்குமதிகளில் ஏற்பட்ட குறைப்பின் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறை ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் மேம்பட்டது. இருப்பினும் கூட, தொற்று உலகளாவிய கேள்வியைப் பாதித்தமைக்கிடையிலும் ஏற்றுமதிச் செயலாற்றம் தொடர்ந்தும் மூன்றாவது மாதமாக வலுவான நிலையில் காணப்படுகிறது. அதேவேளை, 2020 ஓகத்தில் தொழிலாளர் பணவனுப்பல்கள் கணிசமான வளர்ச்சியைப் பதிவுசெய்தமையின் மூலம் நடைமுறைக் கணக்கு வலுவடைந்திருக்கிறது.

தேசிய LANKAQR முன்னெடுப்பு கொழும்பில் தொடக்கி வைக்கப்பட்டது

தேசிய LANKAQR முன்னெடுப்பான “நாடு முழுவதற்குமான LANKAQR” 2020 ஒத்தோபர் 5ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வர்த்தக அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்தன அவர்களினால் பணம், மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி சீரமைப்பு இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அஜித் நிவார்ட் கப்ரால், கூட்டுறவுச் சங்கங்கள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மாண்புமிகு லசந்தா அழகியவண்ண, சமுர்த்தி, வீட்டுத்துறைப் பொருளாதாரம், நுண்பாக நிதி, சுயதொழில் வாய்ப்பு, வியாபார அபிவிருத்தி மற்றும் குறைப் பயன்பாடு அரச மூலவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு செகான் சேமசிங்க, மத்திய வங்கியின் ஆளுநர், தேசமான்ய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷமன், நிதி அமைச்சின் செயலாளர். திரு. எஸ்.கே. ஆட்டிகல உட்பட நாணயச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் தொடக்கி வைக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கம் சார்பில் ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறியின் தீர்ப்பனவினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

இலங்கை மத்திய வங்கியானது இலங்கை அரசாங்கம் சார்பில் ஐ.அ.டொலர் 1 பில்லியன் கொண்ட முதிர்ச்சியடைகின்ற நாட்டிற்கான பன்னாட்டு முறியின் தீர்ப்பனவினை கூப்பன் கொடுப்பனவுகளுடன் சேர்த்து 2020 ஒத்தோபர் 2 அன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இத்தீர்ப்பனவானது அதன் வெளிநாட்டுப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பினை மீள உறுதிசெய்வதுடன் இதன் மூலம் முதலீட்டாளர் நம்பிக்கைக்கு வலுவூட்டி அதன் கறைபடியாத படுகடன் தீர்ப்பனவுப் பதிவுகளைப் பேணுவதற்கான அரசாங்கத்தின் இயலுமை மற்றும் விருப்பம் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொண்டிருக்கக்கூடிய எவையேனும் கரிசனைகளைப் புறந்தள்ளுகிறது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையானது இத்தீர்ப்பனவு மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் ஏனைய அண்மைக்கால சாதகமான அபிவிருத்திகளுக்கு ஏற்கனவே சாதகமாகப் பதிலிறுத்தியுள்ளது. அரசாங்கத்தினாலும் இலங்கை மத்திய வங்கியினாலும் எடுக்கப்பட்ட முனைப்பான வழிமுறைகள் மூலம் துணையளிக்கப்பட்ட உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான எதிர்பார்க்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் மூலம் எதிர்வரும் காலங்களில் சந்தை பற்றிய எண்ணப்பாங்கு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 செத்தெம்பரில் குறைவடைந்துள்ளது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2020 ஓகத்தின் 4.1  சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 4.0 சதவீதத்திற்கு சிறிதளவால் குறைவடைந்தது. 2019 செத்தெம்பரில் நிலவிய உயர்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கத்தின் மூலம் இது பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஓகத்தில் 12.3 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 11.5 சதவீதத்திற்கு குறைந்தவிடத்து உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 ஓகத்தின் 0.8 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 0.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாற்றமானது 2020 ஓகத்தின் 4.8 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 4.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் மூலம் இலங்கையின் தரப்படுத்தல் தரம்குறைக்கப்பட்டமைக்கான பதிலிறுத்தல்

இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தல் தரம்குறைக்கப்பட்டமை மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ் மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிதி அமைச்சு பதிலிறுத்தலொன்றினை வழங்கியுள்ளது. இதனை பின்வரும் இணைய தொடர்பில் காணமுடியும்:

http://www.treasury.gov.lk/documents/10181/859446/PressReleaseModdysRating20200928-eng/2f58fa72-42a7-4bf8-8681-6a08f20df1ef

“இலங்கை சமூக பொருளாதார தரவுகள் - 2020” இன் வெளியீடு

இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடான தரவு ஏடான “இலங்கை சமூக பொருளாதாரத் தரவு – 2020” பொதுமக்களின் தகவல்களுக்காக இப்போது கிடைக்கக்கூடியதாகவுள்ளது. தற்போதைய தரவு ஏடானது தொடரின் 43ஆவது வெளியீடாகும்.

எடுத்துச் செல்வதற்கு இலகுவான இத்தரவு ஏடானது நாட்டின் தோற்றப்பாடு, முதன்மைப் பொருளாதார குறிகாட்டிகள்; நாட்டின் ஒப்பீடுகள்; சமூக பொருளாதார நிலைமைகள்; மனித வளங்கள்; தேசிய கணக்குகள்; வேளாண்மை; கைத்தொழில்; பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்புக்கள்; விலைகளும் கூலிகளும்; வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலர் வெளிநாட்டு நிதி; அரச நிதி மற்றும் பணம் வங்கித்தொழில் மற்றும் நிதி போன்ற தகவல்களை உள்ளடக்கியுள்ளது.

நடைமுறைத் தகவல்களின் சமூக பொருளாதாரத் தரவுகளின் ஓர் பரந்தளவான தரவுகளை ஒரு சுருக்க வடிவில் இத்தரவு ஏடானது வழங்குவதால், இது கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், தொழில்நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள உசாத்துணை மூலமாக இருக்கும்.

Pages

சந்தை அறிவிப்புகள்