இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 மாச்சு 03ஆம் திகதியன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. சபையானது தனியார் துறைக்கான கொடுகடன் பகிர்ந்தளிப்புக்களில் அண்மைக்கால மெதுவடைதலினையும் பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன்மிக்க துறைகளுக்கு போதுமானதற்ற கடன்வழங்கலையும் அவதானத்தில் கொண்டதுடன் தற்போது முன்னெடுக்கப்படும் உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலமைந்த பொருளாதார நடவடிக்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, உற்பத்தித் திறன்மிக்க துறைகளுக்கு முனைப்புடன் கடன் வழங்குவதற்கான நிதியியல் முறைமைக்கான தேவையினையும் வலியுறுத்தியது. மேலும், சில சந்தை வட்டி வீதங்களில் அண்மைக்கால மேல்நோக்கிய போக்குகளை சபை அவதானித்ததுடன் குறைவான பணவீக்கச் சூழலைக் கொண்ட பின்னணியில் பொருளாதாரம், உறுதியாக புத்துயிர்பெறுகின்ற அறிகுறிகளை காண்பிக்கும் வரை குறைந்த வட்டி வீதக் கட்டமைப்பினை தொடந்தும் முன்னெடுப்பதற்கான அதன் அர்ப்பணிப்பினை மீளவும் வலியுறுத்தியது.
Thursday, March 4, 2021