Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம் நிறுவப்பட்டிருக்கிறது

திருத்தப்பட்டவாறான, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் 33ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்படும் அனைத்து வெளிவாரி முறைப்பாடுகளையும் குறைகளையும் கையாளும் பொருட்டு ஒரே கூரையின் கீழ் பணியாற்றும் விதத்தில் 2020.08.10ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கி “நிதியியல் வாடிக்கையாளர் தொடர்புகள் திணைக்களம்” என்ற பெயரில் புதிய திணைக்களமொன்றினை நிறுவியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்கிறது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2020 ஓகத்து 19ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அதன் தற்போதைய மட்டங்களான முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதங்களில் பேணுவதென தீர்மானித்தது. இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைத் தளர்த்தல் வழிமுறைகளினை சந்தைக் கடன் வழங்கல் வீதங்கள் இன்னமும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லையாகையால் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினை தொடரவேண்டிய அவசியத்தினை சபை அங்கீகரித்திருக்கிறது. மிக அதிகமாகவிருப்பதாகக் கருதப்படுகின்ற குறிப்பிட்ட சில வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு இலக்கிடப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு சபை தீர்மானித்திருக்கிறது. இது, சிறியளவிலான கடன்பாட்டாளர்களுக்கு உதவும்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2020 யூலை

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2020 யூனுடன் ஒப்பிடுகையில் பொருளாதார நடவடிக்கை இயல்புநிலையடைவதிலிருந்து நன்மையடைந்து 2020 யூலையில் தொடர்ந்தும் விரிவடைந்தன. 

வியாபார நடவடிக்கைகளின் இயல்புநிலை மூலம் தயாரிப்பு நடவடிக்கைகள் படிப்படியாக கொவிட் நோய்த்தொற்றிற்கு முந்திய மட்டங்களை நோக்கிச் செல்வதனைப் பிரதிபலித்து, தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2020 யூலையில் 64.6இனைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்தது. இதற்கு புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தி துணைச் சுட்டெண்களின் விரிவடைதலே முக்கிய காரணங்களாக அமைந்தன.

2020 யூலையில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்; 51.4 இனை அடைந்ததன் மூலம் பணிகள் துறை தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக தொடர்ந்தும் விரிவடைந்தது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த பணிகள் துறையில் மேலதிக மீட்சியினை எடுத்துக்காட்டி 2020 யூனுடன் ஒப்பிடுகையில் புதிய வியாபாரங்கள், வியாபார நடவடிக்கைகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் என்பவற்றில் அவதானிக்கப்பட்ட விரிவடைதல்கள் மூலம் இது துணையளிக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 யூன்

உள்நாட்டு பொருளாதார நடவடிக்கை படிப்படியாக வழமைக்குத் திரும்பியமையின் காரணமாக 2020 யூனில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை மேலும் உறுதியடைந்தது. வணிக ஏற்றுமதிகள் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க கூடுதலானளவிற்கு மீண்டும் உத்வேகமடைந்தமை அத்தியாவசியமல்லா இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளின் காரணமாக வணிகப்பொருள் இறக்குமதிகள் குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவடைந்தமை என்பனவற்றின் காரணமாக 2020 யூனில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) வீழ்ச்சியடைந்தது. கொவிட்-19 தொற்று பரவியமைக்குப் பின்னர் முதற்றடவையாக யூனில் தொழிலாளர் பணவனுப்பல்கள் வளர்ச்சியைப் பதிவுசெய்தன. இம்மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை ஆகிய இரண்டும் சில வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறைப்பின் உதவியுடன் 2020 யூன் மாத காலப்பகுதியில் இலங்கை ரூபா சிறிதளவு அதிகரிப்பினை பதிவுசெய்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2020 யூலையில் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)   ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 யூனின் 3.9 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 4.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2019 யூலையில் நிலவிய தாழ்ந்த தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கங்களுடன் சேர்ந்து உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பே முக்கிய தூண்டுதலாக அமைந்தது. உணவுப் பணவீக்கம்  (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூனின் 10.0 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 10.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டுக்கு ஆண்டு) 2020 யூனின் 1.4 சதவீதத்திலிருந்து 2020 யூலையில் 1.5 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

பேரண்டப் பொருளாதார எறிவுகளின் இற்றைப்படுத்தல் தொடர்பான ஊடக அறிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மறுக்கின்றது

பல ஊடக அறிக்கைகள் பற்றி மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இதில் குறிப்பிட்ட சில பேரண்டப் பொருளாதார எறிவுகள் இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்பானவை எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி, 2020 ஏப்பிறலில், இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையினை வெளியிட்டதன் பின்னர் அதன் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கு எந்தவித இற்றைப்படுத்தல்களையும் பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. கொவிட்-19 தொற்றினால் உருவான நிச்சயமற்ற நிலைமைகளைக் கவனத்தில் கொள்கையில் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கான இற்றைப்படுத்தல்கள் அடிக்கடி தேவைப்படுகின்றதுடன் இலங்கை மத்திய வங்கி, பொருளாதார நடவடிக்கைகளின் நியமக் குறிகாட்டிகள் கிடைக்கப்பெற்றதும் அவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது. இது அதன் பகுப்பாய்வுகளிலும் கொள்கை வழிகாட்டல்களிலும் மரபுவழியற்ற குறிகாட்டிகளையும் அதேநேர அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றது. 

Pages