Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கட்டார் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால், கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் அதிமேதகு செய்க் அப்துல்லா பின் சவூத் அல்-தானி அவர்களுடன் கொவிட் தாக்கங்களிலிருந்து உரிய பொருளாதாரங்களை புத்துயிர்பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 செத்தெம்பரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஓகத்தில் 6.7 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 6.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இவ்வீழ்ச்சிக்கு 2020 செத்தெம்பரில் நிலவிய உயர் தள புள்ளிவிபரத் தாக்கம் முழுமையாகக் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஓகத்தில் 11.1 சதவீதத்திலிருந்து 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு)  2021 செத்தெம்பரில் 3.0 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 ஓகத்து

அதிகரித்த நிதியியல் உட்பாய்ச்சல்கள் 2021 ஓகத்து மாத காலப்பகுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை வலுப்படுத்திய வேளையில், வணிகப்பொருள் ஏற்றுமதிகள் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டன. இருப்பினும், இறக்குமதிச் செலவினத்தின் அதிகரிப்பானது ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டு ஓராண்டிற்கு முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவாக்கமொன்றினைத் தோற்றுவித்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் 2021 ஓகத்தில் சில உத்வேகத்தினைத் திரட்டி, இலக்கங்கள் குறைவாகக் காணப்பட்டாலும் கடந்த மாதத்தினைப் விட குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பினைப் பதிவுசெய்தன. 2021 ஓகத்தில் தொழிலாளர் பணவனுப்பல்களின் மிதமான போக்கொன்று அவதானிக்கப்பட்டிருந்தது. பொதுவான சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீட்டின் பகுதியாக 2021இல் இலங்கை பன்னாட்டு நாணய நிதியத்திடமிருந்து சிறப்பு எடுப்பனவு உரிமைகளின் ஒதுக்கீட்டினைப் பெற்றுக்கொண்டது. மேலும், இலங்கை மத்திய வங்கிக்கும் வங்காளதேச வங்கிக்குமிடையிலான இருபுடை நாணயப் பரஸ்பர பரிமாற்றல் ஏற்பாடுகளின் கீழான ஆரம்ப பகிர்ந்தளிப்புக்கள் 2021 ஓகத்து மாத காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்டன.

நாணயக்கொள்கை ஆலோசனைச் செயற்குழுவினை மீளமைத்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை ஆலோசனைச் செயற்குழுவானது 2021 ஒத்தோபர் 5ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் மீளமைக்கப்பட்டுள்ளது. நாணயக்கொள்கை ஆலோசனைச் செயற்குழுவானது தனியார் துறையிலிருந்தும் கல்விசார் துறையிலிருந்தும் 12 கீர்த்திமிக்க ஆளுமைகளைக் கொண்டமைந்துள்ளதுடன் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் உறுப்பினருமான திரு. சுனில் லங்காதிலக அவர்களினால் தலைமை தாங்கப்படுகின்றது. ஸ்டெசன் கம்பனிகள் குழுமத்தின் பிரதம நிதியியல் அதிகாரி திருமதி. தமிதா கூகே, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இறக்குமதிப் பிரிவின் தலைவர் திரு. நிரன்ஜன் திசாநாயக்கா, எக்ஸஸ் இன்ஜினியரிங் பிஎல்சி இன் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கிரிஸ்தோபர் ஜோசா, பொருளியல் துறைப் போராசிரியர் சுனந்த மத்தும பண்டார, பிரென்டிக்ஸ் லங்கா லிமிடட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. அஷ்ரப் ஓமார்,  ஸொப்ட்லொஜிக் குழுமத்தின் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அசோக் பதிரகே, வலிபெல் வன் பிஎல்சி இன் தலைவர் மற்றும் ஹேலீஸ் பிஎல்சி இன் துணைத் தலைவர் திரு தம்மிக பெரேரா, மெயினெடெக் லங்கா (பிறைவேட்) லிமிடெட்டின் தலைவர் திரு. ஜெயம் பெருமாள், டிஎஸ்ஐ சம்சொன் குழும வாழ்நாள் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி. குலதுங்க ராஜபக்ஷ், ஓய்வுபெற்ற மூத்த வங்கியியலாளர் திரு. ருச்சிரிபால தென்னகோன் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி செல்வி. கஸ்தூரி செல்லராஜா வில்சன் ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாவர்.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2021 செத்தெம்பர்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் 2021 செத்தெம்பரில் விரிவடைந்தன

தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், 2021 ஓகத்துடன் ஒப்பிடுகையில் 9.2 சுட்டெண் புள்ளிகளால் அதிகரித்து 2021 செத்தெம்பரில் 54.3 ஆக மீளத்திரும்பியது. புதிய கட்டளைகள் மற்றும் தொழில்நிலை துணைச் சுட்டெண்களில் அவதானிக்கப்பட்ட குறிப்பிடத்தக மேம்பாடுகள் இவ்வதிகரிப்பிற்குப் பிரதான காரணமாக அமைந்தன.

பணிகள் கொ.மு.சுட்டெண், 2021 ஓகத்தில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சியின் பின்னர் 2021 செத்தெம்பரில் 52.2 இனைக் கொண்ட சுட்டெண் பெறுமதியினை அறிக்கையிட்டு வளர்ச்சி பாதையில் நுழைந்தது. இதற்கு, புதிய வியாபாரங்கள், நிலுவையிலுள்ள பணிகள் மற்றும் நடவடிக்கைக்கான எதிர்பார்க்கைகள் துணைச் சுட்டெண்களில் அதிகரிப்புக்கள் துணையளித்தன.

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுவினை மீளமைத்தல்

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுவானது 2021 ஒத்தோபர் 6ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் நிதியியல் துறையில் புகழ்பெற்ற ஆளணியினரைக் கொண்டு மீளமைக்கப்பட்டுள்ளது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக் குழுவின் தலைவராக வரையறுக்கப்பட்ட லங்கா கிளியர் (பிறைவேட்)  லிமிடெட்டின்  தலைவர்  முனைவர் கென்னத் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இலங்கை நிதி நிறுவனங்கள் அமைப்பின் தலைவர் திரு. நிரோஷன் உதகே, கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளர் / பொது முகாமையாளர் திரு. சி என் எஸ் என் அந்தோனி, வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கிகள் அமைப்பின் (உத்தரவாத) தலைவர் திரு. எல் எச் ஏ லக்ஷ்மன் சில்வா, பிரைஸ்வோட்டர்ஹவுஸ்கூப்பர்ஸின் முகாமைத்துவப் பங்காளர் திரு. சுஜீவ முதலிகே, இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சஞ்ஜய பண்டார, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு. விஷகோவிந்தசாமி, சனாதிபதி சட்டத்தரணி திரு. குஷான் டி அல்விஸ், கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் திரு. சாலிய விக்ரமசூரிய, எல்ஓஎல்சி ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. கபில ஜயவர்த்தன மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் தலைவர் திரு. கிரிஷான் பாலேந்திரன் ஆகியோர் மீளமைக்கப்பட்ட நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்களாவர். நிதியியல் முறைமை உறுதிப்பாடு மற்றும் நிதியியல் துறை அபிவிருத்தி மீதான கொள்கைகளை வகுப்பதில் மத்திய வங்கிக்கு உதவும் பொருட்டு கருத்துக்களையும் ஆலோசனைகiயும் வழங்குவதற்கு வழிவகுக்கின்ற கலந்துரையாடல்களை வசதிபடுத்தும் நோக்கத்திற்காக தாபிக்கப்பட்ட நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழுவானது இலங்கை மத்திய வங்கியில் தொழிற்படுகின்ற உயர் மட்ட குழுவொன்றாகும். இலங்கை மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு திணைக்களம் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டு ஆலோசனைக்குழுவின் செயலகமாக தொழிற்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்