கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கும் தனிப்பட்டவர்களுக்குமான கடனை காலம்தாழ்த்திச் செலுத்தும் வசதி ரூ.4,000 பில்லியனை விஞ்சியுள்ளது: சௌபாக்யா கடன்களின் தொகை ரூ.179 பில்லியனைக் கடந்துள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்களூடாக கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவுவதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்காக மீள்கொடுப்பனவுக் காலங்களை நீடித்தல், சலுகை வட்டி வீதங்கள், தொழிற்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலம்தாழ்த்திச் செலுத்தும் வசதிகள், கொடுகடன் வசதிகளை மீளக்கட்டமைத்தல்/ மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இத்திட்டங்கள் உள்ளடக்குகின்றன. 

பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு அதாவது சுற்றுலா, ஆடை, பெருந்தோட்டம், தகவல் தொழில்நுட்பம், ஏற்பாட்டுச் சேவை வழங்குநர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பாடசாலை வான்களைத் தொழிற்படுத்துவோர், பாரஊர்திகள், பொருட்களை கொண்டுசெல்கின்ற சிறிய ரக வாகனங்கள் மற்றும் பேருந்துக்கள் போன்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் இச்சலுகைகள் அதிகளவில் உதவின. 

இலங்கை மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற சலுகைத் திட்டங்களுக்கமைவாக, நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை முன்னுரிமைப்படுத்தி நிதியியல் நிறுவனங்கள் மொத்தமாக ரூ.4,083.8 பில்லியன் கொண்ட தொகையுடைய சலுகைககளுக்காக 2.9 மில்லியனுக்கும் மேற்பட்ட கோரிக்கைகளுக்கு அனுமதியளித்துள்ளன (அட்டவணை 1). உரிமம்பெற்ற வங்கிகளினால் 2021.12.31 வரையும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களினால் 2022.03.31 வரையும் நீடிக்கப்பட்டிருந்த இச்சலுகைகள், தொழில்களை இழத்தல், வருமானம் குறைவு, வியாபாரத் தொழிற்பாடுகள் சுருக்கமடைதல், வியாபாரங்களை மூடுதல் என்பன காரணமாக நிதியியல் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்த மேற்குறித்த குழுக்களுக்கு ஆதரவளிப்பதற்கு உதவியுள்ளது. 

முழுவடிவம்

Published Date: 

Monday, November 8, 2021