Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வழிகாட்டல் 2018 - 2018 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

2017ஆம் ஆண்டு சவால் நிறைந்ததாக இருந்தது. கொந்தளிப்பான வானிலை நிலைமையின் காரணமாக பொருளாதார ரீதியான தாக்கங்களை நாம் கண்டிருக்கிறோம். வரட்சியும் வெள்ளமும் வேளாண்மை நடவடிக்கைகளையும் வேளாண்மையினை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் நடவடிக்கைகளையும் தடங்கலுறச் செய்தன. இம்மோசமான வானிலை நிலைமைகளிலிருந்து கசிந்த தாக்கங்கள் பொருளாதாரத்தின் மற்றைய துறைகளையும் பாதித்தன. இதன் விளைவாகப் பொருளாதார வளர்ச்சியானது ஆண்டின் தொடக்கத்தில் குறைவானதாகவும் எறிவு செய்யப்பட்டதிலும் பார்க்கக் குறைவானதாகவும் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டினை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்ட மத்திய வங்கியின் இறுக்கமான நாணயக் கொள்கை நிலையும் அதேபோன்று அரசாங்கத்தின் ஒப்பீட்டு ரீதியான இறுக்கமான இறைக் கொள்கை நிலையும் அரச மற்றும் தனியார் முதலீட்டுச் செலவிடலை ஓரளவிற்குப் பாதித்து தாழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்தன.

ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விஸ்; பிஎல்சி நிறுவனங்கள் மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்படும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை

இரண்டு கம்பனிகளினதும் வைப்பாளர்கள் மற்றும் ஏனைய கடன் வழங்குநர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாக்கும் நோக்குடனும் நிதியியல் முறைமையின் பாதுகாப்பினையும் ஆற்றல் வாய்ந்தமையினையும் உறுதிசெய்வதற்குமாக ஈ.ரி.ஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸியல் சேர்விஸ் பிஎல்சி நிறுவனங்களின் பலயீனமான நிதியியல் செயலாற்றத்தினை கருத்திற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2018.01.01 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் உடனடியாக நடைமுறைக்கு வரும்விதத்தில், தற்காலிக நடவடிக்கையொன்றாக, பின்வரும் ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

1.  இரு கம்பனிகளினதும் விவகாரங்களை முகாமைசெய்வதற்கு குழுவொன்றினை நியமித்தல்.
2.  முதிர்ச்சியடைகின்ற வைப்புக்களின் மீளப்பெறுகையினை கட்டுப்படுத்தல் மற்றும் அத்தகைய வைப்புக்களை ஆறுமாத காலப்பகுதியொன்றுக்கு மீளப் புதுப்பித்தல்.
3.  இணங்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க வைப்புக்களுக்கான வட்டி நிலுவையினை கொடுப்பனவு செய்தல்.

இலங்கை நாணயத் தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் மற்றும் உருச்சிதைத்தல்

இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடமிருந்து கிடைத்த அதிகளவு கோரிக்கைகளையும் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட நாணயத் தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் மாற்றிக் கொள்வதில் பொதுமக்கள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகளையும் பரிசீலனையில் கொண்டு, அத்தகைய நாணயத் தாள்களை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் மாற்றுவதற்கான காலத்தினை 2018 மாச்சு 31 வரை நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் நாணயத் தாள்களை சேதப்படுத்தல், மாற்றம் செய்தல் அல்லது உருச்சிதைத்தல் சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கத்தக்க தண்டனைக்குரியவையாகும். நாணய விதிச் சட்டத்தின் 'உ" ஒழுங்குவிதியின் கீழ், வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட நாணயத் தாள்கள் தொடர்பில் கோரல்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படலாகாது என்பதுடன், அத்தகைய நாணயத் தாள்கள் இலங்கை மத்திய வங்கியினால் பிடித்து வைத்திருக்கப்படலாம்.

அத்தகைய நாணத் தாள்களை வைத்தருப்பவர் அத்தகைய நாணயத் தாள்களின் முகப்பெறுமதியினை 2018 ஏப்பிறல் 01 இலிருந்து இழக்கவேண்டியிருக்கும்.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - ஒத்தோபர் 2017

வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கு ஏற்பட்ட தொடர்ச்சியான உட்பாய்ச்சல் என்பனவற்றின் காரணமாக 2017 ஒத்தோபரில் வெளிநாட்டுத்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைக் காட்டியது. தொடர்ந்து நான்காவது மாதமாக இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்த உயர்ந்த ஏற்றுமதி வருவாய்கள் மற்றும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பன ஒத்தோபரில் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்களவு ஆண்டிற்கு ஆண்டு வீழ்ச்சியைத் தோற்றுவித்தன. எனினும், சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் மிதமாக அதிகரித்த வேளையில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மோசமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகளின் காரணமாக தொழிலாளர் பணவனுப்பல்கள் மேலும் வீழ்ச்சியடைந்தன. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையிலும் அரச பிணையங்கள் சந்தையிலும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமைக்கிடையிலும் இம்மாத காலப்பகுதியில் சென்மதிநிலுவையின் நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் தொடர்ந்தும் காணப்பட்டன.

நாணயக் கொள்கை மீளாய்வு - இல. 8 2017

அண்மைக்கால பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைக் கருத்திற் கொண்டு நாணயச்சபை 2017 திசெம்பர் 27ஆம் நாள் நடைபெற்ற அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானது என்ற கருத்தினைக் கொண்டிருந்ததுடன் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களிலேயே பேணுவதெனவும் தீர்மானித்துள்ளது. எனினும் மத்திய வங்கியானது பொருளாதாரத்தின் அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் தீவிரமாகக் கண்காணிப்பதுடன் தேவைப்படுமிடத்து பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இத்தகைய தீர்மானங்களை மேற்கொள்வதற்கு நாணயச்சபையால் கீழ்வரும் முக்கிய துறை அபிவிருத்திகள் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகப் பணிகளை சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பனி லிமிடட் நிறுவனத்திற்கு கையளித்ததன் மூலம் கிடைக்கப்பெற்ற பெறுகைகள்

இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சைனா மேர்சன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பனி லிமிடட் என்பவற்றுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஐ.அ.டொலர் 292.1 மில்லியன் இலங்கை மத்திய வங்கியில் பேணப்படுகின்ற இலங்கை அரசாங்கத்தின் ஐக்கிய அமெரிக்க டொலர் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

Pages

சந்தை அறிவிப்புகள்