இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகளின் செயல்திறன்வாய்ந்த தன்மையினை உறுதிப்படுத்தும் விதத்தில் 2022 சனவரி 01 தொடக்கம் 2022 பெப்புருவரி 15 வரை இலங்கை அபிவிருத்தி முறிகளின் நேரடி வழங்கல் வாயிலாக ஐ.அ.டொலர் 111.5 மில்லியன் கொண்ட தொகையுடைய நிதியங்கள் திரட்டப்பட்டுள்ளன.
மேற்குறித்த காலப்பகுதியின் போது இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகள், மூன்று மாதங்களிலிருந்து ஐந்து வருடங்களைக் கொண்ட வீச்சுடைய முதிர்ச்சிப் பரம்பலில் காணப்பட்டு, பாரியளவிலான அதேபோன்று சிறியவிலான தகைமையுடைய முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாகவிருந்தது. இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுகளை மேலும் பிரபல்யப்படுத்துவதற்கு சில இலங்கைத் தூதரங்களுடனான கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியும் அந்தந்தநாடுகளிலுள்ள தகைமையுடைய முதலீட்டாளர்களுடன் தொடர்பினை மேற்கொண்டிருந்தது.















இலங்கைக்கு வெளிநாட்டு பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிப்பதற்கும் அதேபோன்று வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு பணம் அனுப்புகின்ற போது முறைசார்ந்த பணம் அனுப்பும் வழிகளை உபயோகிப்பதனை ஊக்குவிப்பதற்கும் இலங்கை மத்திய வங்கி தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அதற்கமைய, "Lanka Remit" என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்துள்ளது. இச்செயலி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
