Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 2021 மேயில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 ஏப்பிறலின் 3.9 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 4.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதற்கமைய, உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 9.0 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 9.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 ஏப்பிறலின் 1.8 சதவீதத்திலிருந்து 2021 மேயில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 மேயில் 3.9 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2021 ஏப்பிறலில் அதிகரித்தது

 தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2021 மாச்சின் 5.1 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இதற்கு, 2020 ஏப்பிறலில் நிலவிய குறைவான தளப் புள்ளிவிபரத் தாக்கம் முக்கிய காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 8.8 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 9.7 சதவீதத்திற்கு அதிகரித்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மாச்சின் 2.0 சதவீதத்திலிருந்து 2021 ஏப்பிறலில் 2.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 ஏப்பிறலில் 5.3 சதவீதத்தில் மாற்றமின்றி காணப்பட்டது.

பயணத்தடைகள் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களமானது தொலைதூர மற்றும் பிரதேசப் பணிகளை வழங்குகிறது

நாட்டினுள் அமுலாக்கப்பட்டுள்ள பயணத்தடைகளின் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு சமூகமளிக்காது ஊழியர் சேமலாப நிதியத் திணைக்களத்தினால் வழங்கப்படும் பணிகளை தபாலில், மின்னஞ்சலில், இணையத்தில் அல்லது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிக் கிளையொன்றின் ஊடாகப் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி பொருளாதாரத்தின் நீடித்து நிலைக்கும் மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்கிறது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 மே 19 ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலனையில் கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. தற்போது நிலவும் தாழ்ந்த பணவீக்கச் சூழல் மற்றும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் மற்றும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையினால் எழுந்துள்ள புதிய சவால்கள் என்பனவற்றின் பின்னணியில் நீடித்து நிலைத்திருக்கும் பொருளாதார மீட்சியொன்றிற்கு ஆதரவளிக்கும் பொருட்டு சபையானது தற்போதுள்ள தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைப் பேணுவதற்குத் தொடர்ந்தும் கடப்பாடு கொண்டுள்ளது.

நிதியியல் உளவறிதல் பிரிவின் மூலம் 2021ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கான தண்டங்களை விதித்தல்

2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் அல்லது பெயர்குறிக்கப்பட்ட நிதியல்லாத் தொழிலின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில்கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

அதற்கமைய, நாட்டில் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான ஒழுங்குமுறைப்படுத்துநராக நிதியியல் உளவறிதல் பிரிவானது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு நிதியியல் நிறுவனங்கள் மீது 2021 சனவரி 01 தொடக்கம் மாச்சு 31 வரையான காலப்பகுதிக்காக மொத்தமாக ரூ.4.0 மில்லியன் தொகையுடைய தண்டங்களை விதித்துள்ளது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 மாச்சு

2021 மாச்சில் இலங்கையின் வெளிநாட்டுத்துறை ஒருபுறம் விரிவடைந்த வர்த்தகப் பற்றாக்குறையை வெளிக்காட்டிய அதேவேளை மறுபுறம் தொழிலாளர் பணவனுப்பல்களில் ஆரோக்கியமானதொரு வளர்ச்சியையும் சுற்றுலாத்துறையில் சிறிதளவான உத்வேகத்தினையும் கொண்ட கலப்பான செயலாற்றத்தினைக் காண்பித்துள்ளது. வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை, 2020 ஏப்பிறலிற்கு பின்பு முதல் தடவையாக 2021 மாச்சில் விரிவடைந்தது. ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2020 மாச்சுடன் அதேபோன்று 2021 பெப்புருவரியுடன் ஒப்பிடுகையில் 2021 மாச்சில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளன. இருப்பினும், தொழிலாளர் பணவனுப்பல்கள் நிலையாக வளர்ச்சியடைந்ததுடன் மிகவும் மெதுவானதொரு வேகத்திலேனும் சுற்றுலாத்துறை மீட்சியடைந்துள்ளது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை இரண்டிலுமான வெளிநாட்டு முதலீடுகள் சிறிய தேறிய வெளிப்பாய்ச்சலை 2021 மாச்சில் தொடர்ந்தும் பதிவுசெய்தன. இவ் மாத காலப்பகுதியில் இலங்கையின் ரூபா ஐ.அ.டொலருக்கெதிராக தேய்வடைந்தமையானது இறக்குமதிகளுக்கான பருவகாலக் கேள்வியiனைப் பகுதியளவில் பிரதிபலித்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்