Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2023 இற்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள்

சுதந்திரத்திற்குப் பின்னரான பொருளாதாரத்தில் மிகவும் சவால்மிக்க ஆண்டாக 2022ஆம் ஆண்டினை இலங்கை எதிர்கொண்டது. 2019இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், 2020இல் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவல் மற்றும் 2021இல் அதன்பின்னரான செயற்பாடுகள் மீதான அதன் நீடித்த தாக்கம், பாரியளவிலான சென்மதி நிலுவை அழுத்தங்களுக்கு மத்தியில் 2022இல் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி என்பன உள்ளடங்கலாக அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான பொருளாதார அதிர்வுகள் காரணமாக தோற்றம்பெற்ற சவால்கள் முன்னெப்பொழுதுமில்லாத கொள்கைச் சமநிலைப்படுத்தல்களுடன் இணைந்து, பொருளாதார நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதித்து, தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்குக் கற்பனைசெய்ய முடியாதளவிலான இன்னல்களை ஏற்படுத்தின. வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்ட வேளையில் உண்மை வருமானங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. இப்பொருளாதார அதிர்வுகளுடன் பின்னிப்பிணைக்கப்பட்ட பொருளாதாரத்தில் பல்வேறு துறைகளில் பல தசாப்தங்களாக நிலவிய கட்டமைப்புசார் பொருளாதாரத் தடைகள் பொருத்தமற்ற கொள்கைத் தெரிவுகளுடன் இணைந்து அதன்மூலம் பேரண்டப்பொருளாதார சமநிலையைத் தளர்த்தி தேசத்திற்கு சடுதியான மற்றும் பல்முனை கொண்ட பின்னடைவொன்றினைத் தோற்றுவித்தன.

இலங்கை சுபீட்சச் சுட்டெண் - 2021

இலங்கை சுபீட்சச் சுட்டெண் (SLPI) 2021இல் 0.796 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்ததுடன், இது, கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றினால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 0.764 உடன் ஒப்பிடுகையில் சிறிதளவு அதிகரிப்பினைக் காட்டியது. ‘பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்’, ‘மக்கள் நலனோம்புகை’ மற்றும் ‘சமூக பொருளாதார உட்கட்டமைப்பு’ ஆகிய துணைச்சுட்டெண்களில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்புக்கள் இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணில் ஏற்பட்ட சிறிதளவு அதிகரிப்பிற்குப் பங்களித்தன.

 

2021இல் பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அதிகரிப்பிற்கு 2020 உடன் ஒப்பிடுகையில், பெயரளவு நியதிகளில் தலைக்குரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி, தொழில்நிலை, கூலிகள் மற்றும் கைத்தொழில் அடர்த்தி என்பனவற்றில் ஏற்பட்ட அதிகரிப்புக்கள் தூண்டுதலாக அமைந்தன. எனினும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் காணப்பட்ட ஒப்பீட்டு ரீதியான உயர்ந்த பணவீக்கம் துணைச் சுட்டெண்ணின் மீது பாதகமான தாக்கத்தினைக் கொண்டிருந்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2022 திசெம்பரில் மேலும் தளர்வடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசுஇ 2013=100)1  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 நவெம்பரின் 61.0 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பர் 57.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்து, 2022இன் இரண்டாம் அரைப்பகுதியில் குறைந்தளவான வாசிப்பைப் பதிவுசெய்தது.  அதையொத்த போக்கினைத் தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 நவெம்பரின் 73.7 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 64.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 நவெம்பரின் 54.5 சதவீதத்திலிருந்து 2022 திசெம்பரில் 53.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

கன்றிச் பினான்ஸ் லிமிடெட் (Kanrich Finance Limited) – பொதுமக்களுக்கான பொறுப்புக்களை தீர்ப்பனவுசெய்தல்

“ஒருங்கிணைப்பதற்கான முதன்மைத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள் துறையை வலுப்படுத்தும் வழிமுறையொன்றாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கன்றிச் பினான்ஸ் லிமிடெட் எதிர்கொண்ட தொடர்ச்சியான மூலதனப் பற்றாக்குறைகளின் காரணமாக 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 25(1)(க) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், 2022.12.26 தொடக்கம் 2023.02.28 வரையான காலப்பகுதியினுள் அதன் பொதுமக்களுக்கான பொறுப்புக்களை (வைப்புக்கள் மற்றும் வாக்குறுதிப் பத்திரங்கள்) தீர்ப்பனவுசெய்யுமாறு கன்றிச் பினான்ஸ் லிமிடெட்டினைப் பணிப்பதற்கு தீர்மானித்துள்ளது. 

மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (மா.மொ.உ.உ) - 2021

இலங்கையின் பெருமளவிலான முக்கிய நடவடிக்கைகளின் மையப்பகுதியாக விளங்குகின்ற மேல் மாகாணம், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் அதன் பங்கில் சிறிதளவிலான அதிகரிப்பொன்றுடன் 2021இல் பெயரளவிலான மொ.உ.உற்பத்தியின் (அடிப்படை ஆண்டு 2015) 42.6 சதவீதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய வெளியீட்டிற்கு தொடர்ந்தும் பாரியளவில் பங்களித்துள்ளது. வடமேல் (11.1 சதவீதம்) மற்றும் மத்திய (10.1 சதவீதம்) மாகாணங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகூடிய பங்குகளை பதிவுசெய்தன. 

மேல், சப்பிரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களிலிருந்து பெயரளவிலான மொ.உ.உற்பத்திக்கு கிடைத்த பங்களிப்பு, 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021இல் அதிகரித்த அதேவேளை, தென், வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பங்களிப்பு மாற்றமின்றிக் காணப்பட்டன. எனினும், மத்திய, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலிருந்து கிடைத்த பங்களிப்புக்கள் 2021இல் சிறிதளவு குறைவடைந்தன.

 

சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி - உரிமத்தை இரத்துச்செய்தல்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் 37(3) ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம், 2022 திசெம்பர் 28ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சிக்கு வழங்கப்பட்ட நிதித்தொழில் உரிமத்தினை இரத்துச்செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமை, நிதித்தொழில் சட்டத்தின் கீழ் நிதித்தொழிலில் ஈடுபடுவதற்கு 2022 திசெம்பர் 28 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அனுமதிக்கப்படாது.

Pages

சந்தை அறிவிப்புகள்