Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2020 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 செத்தெம்பரின் 6.4 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 5.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு, 2019 ஒத்தோபரில் நிலவிய உயர்வான தளத்திலான புள்ளிவிபரவியல் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2020 செத்தெம்பரின் 12.7 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 10.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2020 செத்தெம்பரின் 1.4 சதவீதத்திலிருந்து 2020 ஒத்தோபரில் 1.5 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

இலங்கை மத்திய வங்கியின் தொழிற்பாடுகள் இடைத்தடங்கலின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்

இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒருவருக்கு 2020 நவெம்பர் 19 அன்று கொவிட்-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிக்கின்றது. குறித்த ஊழியர் தற்போது மருத்துவ கவனிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து மத்திய வங்கி துரிதமாகச் செயற்பட்டு, அதன் தலைமை அலுவலக வளாகத்தில் கடுமையான துப்பரவு மற்றும் தொற்றுநீக்கம், நெருங்கிய தொடர்புடையவர்களை கண்டுபிடித்தல் மற்றும் சாத்தியமான தொடர்புடையவர்களுக்கு பீசிஆர் (PCR) பரிசோதனைகளை ஏற்பாடுசெய்தல் உள்ளடங்கலாக நோய்ப்பரவலினைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. பரிசோதிக்கப்பட்ட அனைத்து ஏனைய ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்றலில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை வழிமுறையொன்றாக, இதுவரையிலும் வங்கி வளாகத்தில் நேரடியாகத் தொழிற்பட்ட வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவமும் 2020 நவெம்பர் 20 தொடக்கம் இரு வார காலப்பகுதிக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.

இலங்கை அபிவிருத்தி முறிகள் வழங்கல்

இலங்கை அபிவிருத்தி முறிகள், இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுவதுடன் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் பெயர்குறிக்கப்பட்டவையாகும். மிக அண்மைய இலங்கை அபிவிருத்தி முறி ஏலவிற்பனையானது 2020.11.18ஆம் தீர்ப்பனவு திகதியுடன் 2020 நவெம்பர் 10–13 வரை இடம்பெற்றதுடன், இது ஐ.அ.டொலர் 24.82 மில்லியனைத் திரட்டுவதற்கு இயலச்செய்தது. சொல்லப்பட்ட ஏல விற்பனையில் வழங்கப்பட்ட முதிர்வுகள் ஒரு ஆண்டு 2 மாதங்களிலிருந்து 4 ஆண்டுகள் 2 மாதங்கள் வரை வேறுபட்டதுடன் 6.69 சதவீதத்திலிருந்து 6.82 சதவீதம் கொண்ட நிலையான வீதத்தில் வழங்கப்பட்டன.

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதங்கள்

கொவிட்-19இன் இரண்டாவது அலை காரணமாக வியாபாரங்களும் தனிநபர்களும் முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதத்தினை 2020 ஒத்தோபர் 1 இலிருந்து ஆரம்பமாகும் ஆகக்கூடிய ஆறு மாத காலத்திற்கு நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வங்கிகளைக் கேட்டுக் கொள்கின்றது. தகுதியுடைய கடன்படுநர்கள் 2020 நவெம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் கடன் காலதாமதத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 செத்தெம்பர்

இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியான வீழ்ச்சி, தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அத்துடன் உள்நாட்டு, வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட உறுதிப்பாடு என்பன மூலம் துணையளிக்கப்பட்டு 2020 செத்தெம்பரில் மீட்சியடைந்தது.  மாதகாலப்பகுதியில் வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக மீளுயர்வு அத்துடன் வணிகப்பொருள் இறக்குமதிகளில் குறைவு என்பன காரணமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வர்த்தகப் பற்றாக்குறை 2020 செத்தெம்பரில் மேம்பட்டது. 2020 செத்தெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள், 2011இன் இறுதியிலிருந்து மிக உயர்வான ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. நிதியியல் கணக்கில் அரசாங்கப் பிணையங்கள் சந்தையானது மாதகாலப்பகுதியில் சிறிதளவு உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்த அதேவேளை கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தது. உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தைக்கான தேறிய உட்பாய்ச்சல்கள், செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைத் தளர்த்தியதுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை அதிகரித்துக்கொள்வதற்கு வெளிநாட்டுச் செலாவணியினை தேறிய அடிப்படையொன்றில் ஈர்ப்பதற்கு மத்திய வங்கியினை இயலச்செய்தது. இவ் அபிவிருத்திகளைப் பிரதிபலித்து இலங்கை ரூபா 2020 செத்தெம்பர் மாதகாலப்பகுதியில் உயர்வடைந்தது.

மத்திய வங்கியானது 4% தொழிற்படு மூலதனக் கடன் திட்டத்தின் சலுகைக் காலப்பகுதியினை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக நீடிக்கின்றது

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட தொழில்களை சீரமைக்கும் தேசிய முக்கியத்துவத்தினை இனங்கண்டு, 6 மாத காலப்பகுதியினைக் கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக  24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதியொன்றுடன் கூடிய ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் திட்ட வசதியினை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி 3 கட்டங்களில் நடைமுறைப்படுத்தியது.

எவ்வாறாயினும், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்டவாறு தமது தொழில்களை சீரமைத்துக்கொள்வதில் அநேகமான கடன்பெறுநர்கள் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுதல் எதுவுமின்றி கடன்களை மீளச்செலுத்துவதற்கு கடன்பெறுநர்களுக்கு வசதியேற்படுத்தி ஊக்குவிக்கவேண்டிய முக்கியத்துவத்தினை பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியானது சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன்வசதியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கடன்களுக்கு ஏற்புடைய சலுகைக் காலத்தினை, கடன்பெறுநர்களால் முன்வைக்கப்படுகின்ற எழுத்திலான கோரிக்கையின் மீது மேலும் மூன்று (03) மாதங்களால் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

Pages