Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கு கொள்கை வீதங்களை மேலும் குறைக்கின்றது

2020 மே 06 அன்று நடைபெற்ற தனது விசேட கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, தற்போதைய நாணயக்கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வு செய்து, 2020 மே 06 அன்று வியாபாரம் முடிவுறுத்தப்பட்டதிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் 50 அடிப்படைப் புள்ளிகளினால் முறையே 5.50 சதவீதத்திற்கும் 6.50 சதவீதத்திற்கும் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நாணயச்சபையானது, மந்தமான பணவீக்க அழுத்தங்கள் காணப்படுகையில் கொரோனா வைரஸ் (கொவிட் - 19) உலகளாவிய நோய்த்தொற்றினால் விளைவிக்கப்பட்ட பாதகமான பொருளாதார தாக்கங்களினை சரி செய்வதற்கு பொருளாதாரத்திற்கு மேலும் ஆதரவளிப்பதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களின் வசதிக்காக முடிவுத் திகதியை நீடிக்கின்றது

கொவிட் - 19 பரம்பலினால் நிதி நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதில் பாதிக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களினால் எதிர்கொள்ளப்படும் கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கி கடன் பிற்போடுதல் மற்றும் இரண்டு மாத தொழிற்படு மூலதனத்திற்காக 4 சதவீத வருடாந்த வட்டியுடைய மீள்நிதியிடல் வசதி போன்றவற்றிற்கான வேண்டுகோளைச் சமர்ப்பிக்கும் முடிவுத் திகதியினை 2020.04.30 இருந்து 2020.05.15 வரை நீடித்திருக்கின்றது. மேலும், ரூ.500,000 இற்கு உட்பட்ட பெறுமதியுடைய காசோலைகளின் செல்லுபடிக்காலம் காலாவதியாகியிருக்குமிடத்தில், 2020 மே 15 வரை அதனுடைய செல்லுபடியாகும் காலமாகக் கருத்திற்கொள்ள வேண்டுமென வங்கிகள் வேண்டிக்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான நீடிப்புக்கள் 2020.04.28ஆம் திகதியிடப்பட்ட 2020இன் 06ஆம் இலக்க சுற்றறிக்கையினூடாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு நுகர்வோர் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் 2020 ஏப்பிறலில் குறைவடைந்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2020 மாச்சின் 5.4 சதவீதத்திலிருந்து 2020 ஏப்பிறலில் 5.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இது 2019 ஏப்பிறலில் காணப்பட்ட உயர்ந்த தளத்தின் புள்ளிவிபரவியல் தாக்கத்தினால் மாத்திரமே உந்தப்பட்டது. இதே வேளையில், ஆண்டிற்கு ஆண்டு உணவுப்பணவீக்கமானது 2020 ஏப்பிறலில் 13.2 சதவீதத்தினை பதிவு செய்ததுடன் ஆண்டிற்கு ஆண்டு உணவல்லா பணவீக்கமானது 2020 மாச்சின் 2.5 சதவீதத்திலிருந்து 2020 ஏப்பிறலில் 2.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

2019ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின்படி இலங்கை மத்திய வங்கி நாணயச்சபையின் எழுபதாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமானிய பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் அவர்களால் இலங்கையின் பிரதம அமைச்சரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உச்சபட்ச வட்டி வீதங்களை விதிக்கின்றது

உரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5  சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது. கொவிட் - 19 பரவலாக்கலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலைமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக தங்க நகைகளை அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.

யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி இனால் முதனிலை வணிகருக்கான உரிமத்தினை மீளப்பெறல்

யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி இனால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதனை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 மே 01 இலிருந்து யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி முதனிலை வணிகராக செயற்படுவதனை நிறுத்துவதற்கு அனுமதியளித்திருக்கின்றதென்பதை பொதுமக்களுக்கு இத்தால் அறிவித்திருக்கின்றது. யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சியானது லங்கா தீர்ப்பனவு முறைமையில் நேரடி வணிக பங்குபற்றுநராக தொடர்ந்து தொழிற்படும் என்பதுடன் தனது வாடிக்கையாளர் சார்பாக பத்திரங்களற்ற அரச பிணையங்களின் கொடுக்கல்வாங்கலில் ஈடுபட்டு லங்கா செக்குயர் முறைமையில் வாடிக்கையாளர் கணக்குகளையும் பராமரிக்கும்.

யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சியின் வியாபர தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே இவ்வனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் யூனியன் பாங்க் ஒப் கொழும்பு பிஎல்சி உரிமம்பெற்ற வணிக வங்கியாக அதனுடைய செயற்பாடுகள்/ சேவையினை இது எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது.
 

Pages

சந்தை அறிவிப்புகள்