Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

“இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் - 2021” வெளியீடு

“இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2021” என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிபரத் திணைக்களமானது எளிதாக உசாவும் விதத்தில் வெளியிட்டின் அமைப்பினை மீளக்கட்டமைத்துள்ள அதேவேளை அதன் உள்ளடக்கத்திற்கு மெருகூட்டுவதற்கு மேலும் புள்ளிவிபரங்களைச் சேர்த்துள்ளது. அதற்கமைய, புதிய பதிப்பானது எட்டு முக்கிய விடயப்பரப்புக்களின் அதாவது ‘தேசிய கணக்குகள்’, ‘பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு’, ‘விலைகள், கூலிகள் மற்றும் தொழில்’, ‘வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி’, ‘அரச நிதி’, ‘பணம் மற்றும் மூலதனச் சந்தைகள்’, ‘நிதியியல் துறை’ அத்துடன் ‘ஏனைய நாடுகளின் புள்ளிவிபரங்கள்’ என்பவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்ட புள்ளிவிபர அட்டவணைகளை உள்ளடக்குகின்றது.

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2021 யூன்

தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் யூனில் மீட்சியடைந்தன.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் பாதகமான தாக்கங்களிலிருந்து தயாரிப்பு நடவடிக்கைகள் 2021 யூன் காலப்பகுதியில் சிறிதளவு மீட்சியடைந்தன.

பணிகள் கொ.மு.சுட்டெண் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக வீழ்ச்சியடைந்ததன் பின்னர் 51.3 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து 2021 யூனில் வளர்ச்சி எல்லைக்கு திரும்பியது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 மே

வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2021 மேயில் விரிவடைந்தது. 2020 மேயிலும் பார்க்க ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2021 மேயில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் காணப்பட்டமைக்கு முக்கியமாக ஓராண்டிற்கு முன்னைய உலகளாவிய நோய்த்தொற்றின் புள்ளிவிபர அடிப்படைத் தாக்கங்களுடன் தொடர்புடைய இடையூறுகளே காரணமாக அமைந்தன. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2021 மேயில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்திருந்த வேளையில், இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன. இம்மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்தும் அதிகரித்திருந்த வேளையில், சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் குறைந்த மட்டங்களிலேயே காணப்பட்டன. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலுள்ள வெளிநாட்டு முதலீடுகள் 2021 மேயில் சிறிதளவான தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தன. அதேவேளை, இலங்கை ரூபா இம்மாதம் முழுவதும் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டதுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2021 மே மாத இறுதிக்காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 4.0 பில்லியனாக விளங்கியது.

சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு மீள நியமிக்கப்பட்டுள்ளார்

சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களின் பெயர் நாணயச் சபைக்கு பெயர்குறிக்கப்பட்டதை பாராளுமன்றப் பேரவை அங்கீகரித்ததைத் தொடர்ந்து  அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷஅவர்களினால் 2027 யூன் வரை ஆறு ஆண்டுகளைக் கொண்ட புதிய பதவிக்காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு அவர் மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

திரு. சஞ்சீவ ஜயவர்த்தன இலங்;கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பணியாற்றும் முதலாவது சனாதிபதி சட்டத்தரணியாக விளங்குகின்றார்.

தற்பொழுது இவர் வெளிநாட்டுப் படுகடன் கண்காணிப்புக் குழுவின் நாணயச் சபை மட்டத் தலைவராகவும் சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். இலங்கை மத்திய வங்கியின் ஒழுக்கவியல் குழுவிற்கும் இவர் தலைமைதாங்குகின்றார்.

இரண்டாந்தரச் சந்தையில் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளில் முதலிடுவதற்கு உள்நாட்டுக் கம்பனிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை இரண்டாந்தரச் சந்தையில் கொள்வனவு செய்வதற்கு 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளை (2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்திற்கமைவாக நிதி வியாபாரத்தில் ஈடுபடுகின்ற கம்பனிகள் நீங்கலாக) அனுமதிப்பதற்கு 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைவாக கௌரவ நிதி அமைச்சர், அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஒழுங்குவிதிகளை வழங்கியுள்ளார்.

மேற்குறித்த ஒழுங்குவிதிகளின் பிரகாரம், நடைமுறையிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாகவும் பின்வருகின்ற நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டும் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவரிடமிருந்து கடன்பெற்ற வெளிநாட்டு நாணயத்தின் 50% இனை உபயோகப்படுத்தி நாட்டிற்கான பன்னாட்டு முறிகளில் கம்பனிகள் முதலிடலாம்.

02 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும் சிறப்பு வைப்புக் கணக்குகளுக்காக ஆண்டிற்கு 2% வரையிலான மேலதிக வட்டி

நாட்டினுள் கணிசமான வெளிநாட்டுச் செலாவணியினை ஈர்ப்பதற்கும் அதன் பயனாக நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்குநிலை மீதும் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின்  மீதும் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கும் சிறப்பு வைப்புக் கணக்குகளின் உள்ளார்ந்த ஆற்றலினைக் கருத்திற்கொண்டு, கௌரவ நிதி அமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையுடன் அத்தகைய வைப்புக்கள் வைப்பிலிடப்பட்ட ஆரம்பத் திகதியிலிருந்து 24 மாதங்களைக் கொண்ட திரண்ட காலப்பகுதியொன்றுக்கு சிறப்பு வைப்புக் கணக்குகளை நீடிப்பதற்கு அனுமதி வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளார். அவ்வாறு நீடிக்கப்படுகின்ற சிறப்பு வைப்புக் கணக்குகள், அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆண்டிற்கு 02% வரையிலான மேலதிக வட்டிக்கு தகைமையுடையனவாகவிருக்கும்.  

நாட்டில் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்ளும் தேசிய முயற்சிக்கான உதவியினை நாடுவதற்கு இலங்கை அரசாங்கம் 2020 ஏப்பிறல் 08 அன்று சிறப்பு வைப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2021 யூன் 25ஆம் திகதியன்று உள்ளவாறு சிறப்பு வைப்புக் கணக்குகளுக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வைப்புகள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 451 மில்லியன் தொகையினைக் கொண்டிருந்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்