Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

வெளிநாட்டில் தொழில்புரிகின்றவர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலத்தை நீடித்தல்

வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால் அனுப்பப்படும் பணத்திற்காக “தொழிலாளர்களின் உள்முகப் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் ஐ.அ.டொலர் ஒன்றிற்கான ரூ.2 இனைக் கொண்ட ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக அவ்வாறு அனுப்பும் பணத்திற்காக மேலும் ரூ.8 வழங்குவதை 2022.01.31 வரை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 2021 திசெம்பர் காலப்பகுதியில் இதுவரையிலும் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ரூ.10 கொண்ட இம்மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் மற்றும் அலுவல்சார் ஒதுக்கு நிலைமை

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றின் பொருளாதாரத் தாக்கத்தினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் வெளிநாட்டுத் துறையின் பாதகமான அபிவிருத்திகளினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களுக்கும் மத்தியில் இலங்கைப் பொருளாதாரம் 2021 ஆண்டு முழுவதும் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மையினைக் காண்பித்தது. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் கொடுப்பனவு உள்ளடங்கலாக வெளிநாட்டுக் கடன்களை மீள்செலுத்துவதன் ஊடாக இலங்கை அதன் படுகடன் கடப்பாடுகளையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. தற்போதுள்ள வெளிநாட்டுப் படுகடன் நீடித்துநிலைத்திருக்கும் முறையொன்றில் முகாமைத்துவம் செய்வதற்கு ஆண்டின் ஆரம்பத்திலிருந்து படுகடனல்லாத பாய்ச்சல்களை ஊக்குவிப்பது தொடர்பில் வலியுறுத்துவதுடன் அலுவல்சார் ஒதுக்குகளை குறைநிரப்புவதற்கான சாத்தியமான வழிமுறைகளை வினைத்திறனாகக் கண்டறிவதில் மத்திய வங்கியும் அரசாங்கமும தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளன.

இலங்கையின் சுபீட்சச் சுட்டெண் - 2020

இலங்கையின் சுபீட்சச் சுட்டெண்ணானது  2019இல் பதிவாகிய 0.783 உடன் ஒப்பிடுகையில் 2020இல் 0.786 இற்கு சிறிதளவு அதிகரித்தது. ஆண்டுக்காலப்பகுதியில் கொவிட் 19 உலகளாவிய நோய்த்தொற்றிற்கு மத்தியில் ‘மக்கள் நலநோன்புகை’ துணைச் சுட்டெண், மேம்பட்ட அதேவேளை ‘பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல்’ மற்றும் ‘சமூகப் பொருளாதார உட்கட்டமைப்பு’ ஆகிய துணைச் சுட்டெண்களில் வீழ்ச்சிகள் அவதானிக்கப்பட்டன.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 2021 நவெம்பரில் 6.2 சதவீதத்திற்கு உயர்வடைந்த அதேவேளை, ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கம் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஒத்தோபரின் 8.3 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை ஆண்டுச் சராசரி அடிப்படையில் தேநுவிசு 2021 ஒத்தோபரின் 5.7 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களால் பணவீக்கம் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கமானது (ஆண்டுக்கு ஆண்டு) 2021 ஒத்தோபரின் 11.7 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 16.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டுக்கு ஆண்டு) 2021 ஒத்தோபரில் 5.4 சதவீதத்திலிருந்து 2021 நவெம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 ஒத்தோபர்

வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறை 2020 ஒத்தோபரில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 509 மில்லியனிலிருந்து 2021 ஒத்தோபரில் ஐ.அ.டொலர் 495 மில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தது. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2021 ஒத்தோபரில் வரலாற்றில் முதற்தடவையாக உயர்ந்தளவிலான மாதாந்த ஏற்றுமதிப் பெறுமதியினைப் பதிவுசெய்த அதேவேளையில், தொடர்ச்சியாக ஐந்தாவது மாதமாக ஐ.அ.டொலர் 1.0 பில்லியனிற்கு மேலான ஏற்றுமதி வருவாய்களைப் பதிவுசெய்தது. மேம்பாடடைந்துவரும் நாணய மாற்றல்களுடன் கூடிய ஏற்றுமதி வருவாய்களின் இத்தகைய அதிகரிப்பு எதிர்வரும் காலப்பகுதியில் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைக்கான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதிச் செலவினமும் 2021 ஒத்தோபரில் ஆண்டிற்காண்டுஅடிப்படையில் வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்தது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் முன்னைய மாதத்திலும் பார்க்க குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்புடன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்தன. 2021 ஒத்தோபரில் தொழிலாளர் பணவனுப்பல்களில் மேலுமொரு மிதமான போக்கு அவதானிக்கப்பட்டது. இம்மாத காலப்பகுதியில் அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை இம்மாத காலப்பகுதியில் வங்கிகளுக்கிடையிலான சந்தையில் சராசரி நிறையேற்றப்பட்ட உடனடி செலாவணி வீதம் ஐ.அ.டொலரொன்றிற்கு ஏறத்தாழ 201 ரூபாவாகக் காணப்பட்டது.

அரசாங்கம் பிட்ச் தரமிடலின் அவசரமான தரமிடல் செயற்பாட்டினை வன்மையாக மறுதலிக்கின்றது

பெருமளவிற்கு ஆய்ந்தமைவில்லாத ஓர் நடத்தையாக பிட்ச் தரமிடல் 2021 திசெம்பர் 17ஆம் நாளன்று இலங்கையின் நாட்டிற்கான பன்னாட்டுத் தரமிடலினைக் குறைத்தது. இதனூடாக ஒட்டுமொத்த உலகமும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பன்முக அலைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் சூழலொன்றில் இலங்கையில் நடைபெற்றுவரும் நேர்க்கணிய அபிவிருத்திகளை பிட்ச் தரமிடல் அங்கீககரிக்க தவறியமை எடுத்துக்காட்டப்படுகின்றது. இந்நடவடிக்கையானது 2022 தேசிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்பிற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விசஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தரமிடலின் வாத ஆதாரமற்ற குறைப்பினைப் போன்றதாகும். குறிப்பாக பொருளாதாரத்தின் சகல துறைகளிலுமான அண்மைய அபிவிருத்திகள் மற்றும் அண்மித்துவரும் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் தொடர்ச்சியாக பிட்ச் தரமிடலிற்கு இற்றைப்படுத்தப்பட்டது என்பதனை குறிப்பாக கருத்திற்கொள்ளும்போது பன்னாட்டு ரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தரமிடல் முகவராண்மையொன்றின் தரப்பிலிருந்து இலங்கையின் தரமிடலைக் குறைப்பதற்கான இத்தகையதொரு விரைவுத்தன்மையானது சிந்தனைக்கெட்டாததொரு விடயமாகக் காணப்படுகின்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்