Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

அலுவல்சார் ஒதுக்கு நிலைமையின் உள்ளடக்கம் தொடர்பிலான தெளிவாக்கம்

மத்திய வங்கியின் பன்னாட்டு ஒதுக்கு முகாமைத்துவமானது மாறும்தன்மை கொண்டதாகவும் நுட்ப செயன்முறையுடையதாகவும் காணப்படுவதுடன், இது பொதுவாக நாட்டின் வெளிநாட்டுச் சொத்துக்கள் உடனடியாக கிடைப்பனவாகவுள்ளதனையும் வரையறுக்கப்பட்ட குறிக்கோள்களை அடையும் விதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதனையும் உறுதிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சொத்துக்களின் உள்ளடக்கம், நாணயக் கலவை, திரவத்தன்மை தேவைப்பாடுகள், தவணைக் காலம், இலாபத்தன்மை, பாதுகாப்பு போன்ற ஏனைய முதலீட்டுச் சாதனங்களுடன் தொடர்புபட்ட பண்புகளுடன் பொருத்தமான ஒதுக்கு முகாமைத்துவக் கொள்கைகளின் பின்பற்றுதலானது நாட்டிற்கு நாடு மாறுபடுவதுடன் நாட்டின் குறிப்பிட்ட சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார முன்னுரிமைகளைச் சார்ந்து காணப்படும். 

ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் மாற்றல் மற்றும் உயர்ந்தளவிலான தொழிலாளர் பணவனுப்பல்களைக் கவர்வதற்கான ஊக்குவிப்புத் திட்டம்

இலங்கைக்கான ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விதிகள் சுயநலங்கொண்ட குறித்த சில தரப்பினரால் தவறுதலாகப் பொருட்கோடல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, உரிமம் பெற்ற வங்கிகளினால் தொழிலாளர் பணவனுப்பல்கள் முழுவதையும் அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி நிதிப் பெறப்பட்டதும் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றுவதனை இலங்கை மத்திய வங்கியின் விதிகள் தேவைப்படுத்துகின்றன என வாத ஆதாரமற்ற ஊகம் விசமத்தனமாகப் பரப்பப்பட்டுள்ளது. ஏற்றுமதிப் பெறுகைகளின் மாற்றல் மீதான விதிகள் தொழிலாளர் பணவனுப்பல்களுக்குப் பொருந்தாது. உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகளினூடாக தமது வருவாய்களை அனுப்புகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் அத்தகைய நிதியை வெளிநாட்டுச் செலாவணியில் வைத்திருக்கலாம். இதற்கமைய வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் தமது பணவனுப்பல்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய கட்டாயமில்லை.

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2022 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

2021 திசெம்பர் பணவீக்கம் - கொ.நு.வி.சு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 நவெம்பரின் 9.9 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 12.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி அடிப்படையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2021 நவெம்பரின் 5.3 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. பணவீக்கத்தின் பாரியகூறு வழங்கல் பக்க காரணிகளாலேயே தூண்டப்படுகின்றது என நடப்புப் பணவீக்கத்தின் முக்கிய தூண்டற்பேறுகள் பற்றிய விரிவான பகுப்பாய்வு எடுத்துக்காட்டுகின்றது. இது தொடர்பிலான விரிவான விளக்கம் விரைவில் மத்திய வங்கியினால் வெளியிடப்படும்.

உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் பணவீக்கமானது தூண்டப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 நவெம்பரின் 17.5 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 22.1 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 நவெம்பரின் 6.4 சதவீதத்திலிருந்து 2021 திசெம்பரில் 7.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.   

எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் அலுவல்சார் ஒதுக்குகளின் நிலைமை

எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் (2021 திசெம்பர் 22ஆம் நாளன்று அறிவிக்கப்பட்டவாறு) அண்மித்துவருவதுடன் அண்மைய உட்பாய்ச்சல்களின் பெறுகையுடன் அலுவல்சார் ஒதுக்குகளின் நிலைமை தற்போது ஏறத்தாழ ஐ.அ.டொலர் 3.1 பில்லியன் பெறுமதியினை அடைந்துள்ளதுடன் 2021இன் இறுதியளவில் அத்தகைய மட்டத்தில் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. மேலும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டவாறு தற்போது பேச்சுவார்த்தைக்குட்பட்டுள்ள ஏனைய பல்வேறு வசதிகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள் 2022 சனவரி மாதத்தின் ஆரம்பப் பகுதியில் கிடைக்கப்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டில் தொழில்புரிகின்றவர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலத்தை நீடித்தல்

வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம்பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால் அனுப்பப்படும் பணத்திற்காக “தொழிலாளர்களின் உள்முகப் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் ஐ.அ.டொலர் ஒன்றிற்கான ரூ.2 இனைக் கொண்ட ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக அவ்வாறு அனுப்பும் பணத்திற்காக மேலும் ரூ.8 வழங்குவதை 2022.01.31 வரை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. 2021 திசெம்பர் காலப்பகுதியில் இதுவரையிலும் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ரூ.10 கொண்ட இம்மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

Pages