சம்பள உயர்வு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தெளிவுபடுத்தல்

2024 – 2026 ஆண்டுகாலப்பகுதியினை உள்ளடக்கி தொழிற்சங்கங்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் ஆளுகைச் சபையினால் ஒப்புதலளிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் ஊழியர்களுக்கான சமீபத்திய ஊதிய திருத்தம் தொடர்பில் அண்மைய பாராளுமன்ற அமர்வுகளில் சில பாராளுமன்ற உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கள் மற்றும் குறிப்புக்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த அண்மைக்கால செய்திக் குறிப்புக்கள் பற்றி இலங்கை மத்திய வங்கி அவதானத்தைக் கொண்டுள்ளது.   

இது தொடர்பில், இலங்கை மத்திய வங்கியின் அலுவலர்களின் ஊதியத்தின் அண்மைய திருத்தம் தொடர்பாக செயன்முறை மற்றும் காரணங்களைப் பொருத்தமான பாராளுமன்ற குழுவொன்றின் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், இலங்கை மத்திய வங்கி பாராளுமன்றத்துடன் பொதுவாக தொடர்பூட்டலை மேற்கொள்ளும் நிதி அமைச்சர் என்ற வகையில் கௌரவ சனாதிபதிக்கு வாய்ப்பொன்றினைக் கோரி எழுத்து மூலமாக கோரிக்கையொன்றை மேற்கொள்வதற்கு, 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80 (2) (ஆ)ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, ஆளுகைச் சபை 2024 பெப்புருவரி 21 அன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய ஆளுநர் 2024.02.22 அன்று எழுத்து மூலமான கோரிக்கையொன்றைச் சமர்ப்பித்தார்.   

இலங்கை மத்திய வங்கி கோரப்பட்ட வாய்ப்பு வழங்கப்பட்டவுடன் அல்லது தகவலுக்கான கோரிக்கையைப் பெற்றவுடன் அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்.

Published Date: 

Sunday, February 25, 2024