தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2016 செத்தெம்பரில் 57.7 உடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் 56.5 ஆகக் காணப்பட்டது. கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணில் ஏற்பட்ட வீழ்ச்சியானது 2016 ஒத்தோபரில் தயாரிப்பு நடவடிக்கைகள் மிதமான வேகத்தில் விரிவடைந்தமையினை எடுத்துக்காட்டுகின்றது. செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் ஒத்தோபரில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகள் துணைச் சுட்டெண்களின் செயலாற்றத்தில் காணப்பட்ட மிதமான வேகமே முக்கிய காரணமாகும். கொள்வனவு இருப்பு துணைச் சுட்டெண் ஒத்தோபரில் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து எதிர்வரும்; காலத்திற்காக இருப்புக்கள் குவிக்கப்பட்டமையினை எடுத்துக் காட்டிய வேளையில் நிரம்பலர் வழங்கல் நேரம் சிறிதளவில் அதிகரித்தது. தொழில்நிலைத் துணைச் சுட்டெண்ணும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியைக் காட்டியது. ஒட்டுமொத்த தரவுப் புள்ளிகள் விரிவாக்கமொன்றினைக் கொண்டிருந்தவிடத்து மற்றைய அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 அடிமட்டத்திற்கு மேலே காணப்பட்டன. நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புக்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு மேம்பாடொன்றினைக் காட்டின.















2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பரிமாறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 ஒத்தோபர் 19ஆம் நாளன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி. கல்யாணி தகநாயக்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு.எச்.அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 
