மூலதனப் பாய்ச்சல்களை மேலும் தளர்த்தல் மற்றும் நடைமுறைக் கணக்கு கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பல்வேறு வகையான வெளிநாட்டு நாணய/ ரூபாக் கணக்குகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை இலகுவாக்கும் நோக்குடன் புதிய வெளிநாட்டுச் செலாவணிச் சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் அதன் 2016ஆம் ஆண்டிறக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் அறிவித்திருந்தது.
இவ்வறிவித்தலினை தொடர்ந்து, வெளிநாட்டு செலாவணி தொழிற்பாடுகளுக்கான புதிய சட்டம் மற்றும் கொள்கை கட்டமைப்பொன்றானது 2017 நவெம்பர் 20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 1953ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தினை பிரதியிடுகின்ற 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய சட்டத்தின் ஏற்பாடுகளானது இலங்கை மத்திய வங்கியில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும்.