2020 ஒத்தோபரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட முதிர்வடைந்த நாட்டிற்கான பன்னாட்டு முறியினை வெற்றிகரமாக மீளச்செலுத்தியதன் மூலம் அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டியது. வர்த்தகப் பற்றாக்குறையில் தொடர்ச்சியான மேம்படுத்தல், தொழிலாளர் பணவனுப்பல்களில் அதிகரிப்பு, உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் ஏற்பட்ட உறுதிப்பாடு என்பன மாத காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறைச் செயலாற்றத்திற்கு துணையளித்தன. குறைவான உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் கீழ் இறக்குமதிகள் தொடர்ந்தும் கட்டுப்பட்டிருந்த அதேவேளை, ஒத்தோபரின் ஆரம்பம் தொடக்கம் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி மற்றும் துணைப் பணிகளுக்கான இடையூறுகளின் காரணமாகவும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களிடமிருந்து கேள்வி குறைவடைந்தமை மூலமும் 2020 ஒத்தோபரில் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்தன. மாதகாலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள், தொடர்ந்தும் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது.
















