Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

54வது தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாடு/ உயர்மட்ட ஆய்வரங்கு மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர் சபையின் 38வது கூட்டம்

இலங்கை மத்திய வங்கியானது 54வது தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாடு/ உயர்மட்ட ஆய்வரங்கு மற்றும் தென்கிழக்காசிய மத்திய வங்கி ஆளுநர் சபையின் 38வது கூட்ட நிகழ்வினை 2018 நவெம்பர் 29 தொடக்கம் திசெம்பர் 02 வரை கொழும்பில் நடைபெறுவதற்கு அனுசரணை வழங்கியது. இந்நிகழ்வில் தென்கிழக்காசிய உறுப்பு மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் மற்றும் பேராளர்கள் அத்துடன் நாணய மேலாண்மைச் சபையினரும்  பங்கேற்றனர். பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை முகாமைத்துவ பணிப்பாளர் மிட்சுஹிரோ புருசாவா முதன்மைப் பேச்சாளராக கலந்துகொண்டார்.

தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையமானது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் நிதியியல், நாணய மற்றும் வங்கித்தொழில் கருமங்களில் புரிந்துணர்வினை பாரியளவில் ஊக்குவிப்பதற்கு முன்னணியான பங்கொன்றை ஆற்றுகின்றது. 1982இல் நிறுவப்பட்ட தென்கிழக்காசிய மத்திய வங்கிகள் நிலையமானது கற்றல் நிகழ்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சிப் பணி மற்றும் வலையமைப்பாக்கம் என்பன ஊடாக ஆசிய பசுபிக்கின் மத்திய வங்கிகளுக்கும் நாணய மேலாண்மைச் சபைகளுக்கும் பணியாற்றுகின்றது. 

அண்மைய தரமிடல் தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தரமிடல் முகவர்களுடனான சர்ச்சை

இலங்கையின் நீண்டகாலத் தரமிடலை ‘B+’ (உறுதியான தன்மை) இலிருந்து ‘B’ (உறுதியான தன்மை) தரம் குறைப்பதற்காக 2018 திசெம்பர் 03ஆம் நாளன்று பிட்ஜ் ரேட்டிங்கினாலும் 2018 திசெம்பர் 4ஆம் நாளன்று ஸ்டான்டட் அன்ட் புவரினாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நாட்டின் பேரண்டப் பொருளாதார அடிப்படைகளின் மீதான ஊர்ஜிதப்படுத்தப்படாத அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என இலங்கை மத்திய வங்கி கருதுகின்றது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2018 செத்தெம்பர்

2018 செத்தெம்பரில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை அழுத்தமொன்றிற்கு உட்பட்டது. வர்த்தகக் கணக்கில் காணப்பட்ட விரிவடைந்த பற்றாக்குறை மற்றும் சொத்துப்பட்டியல் முதலீடுகள் வெளிச்செல்வதற்கு காரணமாக அமைந்த ஐ.அ.டொலர் வலுவடைந்தமை என்பன இம்மாதத்தில் சென்மதி நிலுவையினை மோசமாகப் பாதித்தன. ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் தொடர்ந்து நான்காவது மாதமாக ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்ட போதும் இறக்குமதிச் செலவினத்தில் ஏற்பட்ட உயர்ந்த வளர்ச்சி ஏற்றுமதி வருவாய்களின் அதிகரிப்பை விஞ்சிக் காணப்பட்டது. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தையின், வெளிநாட்டு முதலீடுகள் உலகளாவிய நிதியியல் சந்தைகள் உறுதியடைந்தமைக்கு பதிலிறுத்தும் விதத்தில் வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. அதேவேளை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையும் செத்தெம்பர் மாதத்தில் வெளிநாட்டு முதலீடுகளில் ஒரு சில வெளிப்பாய்ச்சல்களைக் காட்டியது. இதன்விளைவாக ஆண்டின் முதல் எட்டுமாத காலப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராக 5.3 சதவீதத்தினால் தேய்வடைந்த இலங்கை ரூபா செத்தெம்பரில் மேலும் 4.6 சதவீதத்தினால் தேய்வடைந்து உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் மீது அழுத்தமொன்றைப் பிரதிபலித்தது.

இலங்கை சமிக்ஞைப் படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் முகமாக ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்று வெளியிடப்படுகின்றது

இலங்கை மத்திய வங்கி, இலங்கை சமிக்ஞை படையணியின் 75ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் முகமாகவும் 75 ஆண்டு காலப்பகுதிக்கு மேலாக நாட்டிற்கு அது ஆற்றிய அரும் பணிக்கு அங்கீகாரமளிக்கும் விதத்திலும் ரூ.10 முகப்புப் பெறுமதியினைக் கொண்ட சுற்றோட்ட நியம ஞாபகார்த்த நாணயக் குத்தியொன்றினை வெளியிட்டிருக்கின்றது. முதலாவது நாணயக் குத்தி உத்தியோக பூர்வமாக மாண்புமிகு பிரதம மந்திரியும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2018 நவெம்பர் 27ஆம் நாளன்று கையளிக்கப்பட்டது. 

இந்நாணயக் குத்தியானது உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் ஏற்கனவே சுற்றோட்டத்திலுள்ள ஏனைய நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளுடன் சேர்ந்து கொடுப்பனவுகளுக்கு பயன்படுத்தப்படக்கூடியதாகவிருக்கும்.

புதிய சுற்றோட்ட நியம நாணயக் குத்தித் தொடரொன்று வெளியிடப்படுகின்றது

இலங்கை மத்திய வங்கி, நாணயக் குத்திகளின் வார்ப்புச் செலவினைக் குறைத்தல், நாணயக் குத்திகளின் பாவனைக் காலத்தினை அதிகரித்தல், இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய தன்மையினை வழங்கல், கட்புல ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் இலகுவாக அடையாளம் காணக்கூடிய தன்மையை வழங்கி ஆகியவற்றின் குறிக்கோள்களுடன் ரூ.10, ரூ.5, ரூ.2, ரூ.1 ஆகிய முகப்புப் பெறுமதியில் புதிய நாணயக் குத்தித் தொடரை சுற்றோட்டத்திற்கு விட்டிருக்கின்றது. முதலாவது நாணயக் குத்திகளைக் கொண்ட பொதி உத்தியோக பூர்வமாக மாண்புமிகு பிரதம மந்திரியும் நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2018 நவெம்பர் 27ஆம் நாளன்று கையளிக்கப்பட்டது. 

நாணயக் குத்திகள் 2018 திசெம்பர் 3ஆம் நாளிலிருந்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினூடாக சுற்றோட்டத்திற்கு விடப்படும். இப்புதிய நாணயக் குத்திகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட இதே நாணய இனக்குத்திகளுடன் சேர்ந்து சுற்றோட்டத்திலிருக்கும். 

2018 ஒத்தோபரில் பணவீக்கம் மேலும் வீழ்ச்சியடைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100)   ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறு முதன்மைப் பணவீக்கம் 2016 சனவரி முதல் ஆகக் குறைவாக 2018 ஒத்தோபரில் 0.1 சதவீதத்தினைப் பதிவுசெய்து தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்காகவும் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. 2018 ஒத்தோபரில் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்தில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலானது பிரதானமாக உயர்வான உணவு விலைகளின் காரணமாக முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் நிலவிய உயர்வான தளத்தினால் தூண்டப்பட்டிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு உணவுப் பணவீக்கமானது தொடர்ச்சியாக மூன்றாவது மாதத்திற்காகவும் வீழ்ச்சியடைந்து 2018 ஒத்தோபரில் -6.6 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. எவ்வாறாயினும், ஆண்டுக்கு ஆண்டு உணவல்லாப் பணவீக்கமானது மாதத்தின் போது தொடர்ந்து அதிகரித்து 5.8 சதவீதத்தினை அடைந்தது. 

ஆண்டுச் சராசரி அடிப்படையொன்றில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றம் 2018 செத்தெம்பரில் 4.0 சதவீதத்திலிருந்து 2018 ஒத்தோபரில் 3.3 சதவீதமாகக் குறைவடைந்தது.

Pages

சந்தை அறிவிப்புகள்