நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்றின் தாக்கங்களை வெற்றிகொள்வதற்கான தேசிய முயற்சிக்கு ஆதரவினை நாடும் பொருட்டு இலங்கை அரசாங்கமானது 2020 ஏப்பிறல் 08ஆம் திகதியன்று சிறப்பு வைப்புக் கணக்கினை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, 2020 ஒத்தோபர் 07 அன்றுள்ளவாறு சிறப்பு வைப்புக் கணக்குகளிலுள்ள மொத்த வைப்புகள் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 272 மில்லியன் தொகையாகவிருந்தது.
நாட்டினுள் கணிசமான வெளிநாட்டுச் செலாவணித் தொகையினை ஈர்ப்பதற்கு சிறப்பு வைப்புக் கணக்குகளின் சாத்தியத்தன்மையினையும் அதன் பயனாக நாட்டின் வெளிநாட்டு நாணய ஒதுக்கு நிலைமை மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மீதான சாதகமான தாக்கத்தினையும் கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கமானது இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் பரிந்துரையின் மீது சிறப்பு வைப்புக் கணக்குகளைத் திறப்பதற்கு செல்லுபடியான காலப்பகுதியினை 2021 ஏப்பிறல் 07ஆம் திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.