இலங்கை மத்திய வங்கியானது நியதி ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2020 யூன் 16 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 யூன் 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நியதி ஒதுக்கு விகிதத்தின் இக்குறைப்பானது உள்நாட்டு பணச் சந்தைக்கு ஏறத்தாழ ரூபா 115 பில்லியன் கொண்ட மேலதிக திரவத்தன்மையினை உட்செலுத்தி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதியச் செலவுகளைக் குறைக்கின்ற வேளையில் பொருளாதாரத்திற்கு கொடுகடன் பாய்ச்சலினை துரிதப்படுத்துவதற்கு நிதியியல் முறைமையினை இயலச்செய்யும்.
 
இன்றைய தீர்மானத்துடன், மத்திய வங்கியானது கொள்கை வட்டி வீதங்களை மொத்தமாக 150 அடிப்படை புள்ளிகளினால் குறைத்தமை மற்றும் வங்கி வீதத்தினை 550 அடிப்படை புள்ளிகளினால் குறைத்தமை உள்ளடங்கலாக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு ஏனைய இலகுபடுத்தல் வழிமுறைகளுக்கு மேலதிகமாக 2020 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நியதி ஒதுக்கு விகிதத்தினை மொத்தமாக 300 அடிப்படை புள்ளிகளினால் குறைத்துள்ளது. 
 
நிதித் துறையானது தொழில்களுக்கும் வீட்டலகுகளுக்கும் குறைந்த செலவில் கடன் வழங்குதலை அதிகரிப்பதன் மூலம் உயர்வான திரவத்தன்மை மட்டத்தினதும் குறைக்கப்பட்ட நிதியியல் செலவுகளினதும் நன்மைகளைத் தாமதமின்றி பொருளாதாரத்திற்கு பரிமாற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாணயச் சபையானது பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிக்கும் என்பதுடன் எதிர்வரவிருக்கும் காலத்தில்  பொருளாதார நடவடிக்கையின் நிலைத்திருக்கக்கூடிய மறுமலர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு மேலதிக கொள்கை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை எடுக்கும்.

 

 

Published Date: 

Tuesday, June 16, 2020