ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் மாற்றல் மற்றும் உயர்ந்தளவிலான தொழிலாளர் பணவனுப்பல்களைக் கவர்வதற்கான ஊக்குவிப்புத் திட்டம்

இலங்கைக்கான ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட விதிகள் சுயநலங்கொண்ட குறித்த சில தரப்பினரால் தவறுதலாகப் பொருட்கோடல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, உரிமம் பெற்ற வங்கிகளினால் தொழிலாளர் பணவனுப்பல்கள் முழுவதையும் அத்தகைய வெளிநாட்டுச் செலாவணி நிதிப் பெறப்பட்டதும் வலுக்கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்றுவதனை இலங்கை மத்திய வங்கியின் விதிகள் தேவைப்படுத்துகின்றன என வாத ஆதாரமற்ற ஊகம் விசமத்தனமாகப் பரப்பப்பட்டுள்ளது. ஏற்றுமதிப் பெறுகைகளின் மாற்றல் மீதான விதிகள் தொழிலாளர் பணவனுப்பல்களுக்குப் பொருந்தாது. உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் ஏனைய முறைசார் வழிகளினூடாக தமது வருவாய்களை அனுப்புகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் அத்தகைய நிதியை வெளிநாட்டுச் செலாவணியில் வைத்திருக்கலாம். இதற்கமைய வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் தமது பணவனுப்பல்களை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டிய கட்டாயமில்லை. எனினும், அவ்வருவாய்களை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு விருப்பங்கொண்டவர்கள் இதனை மேற்கொள்வதற்கு தகுதியுடையவர்கள் என்ற அதே வேளையில் இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட “உள்முக தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்பிலான ஊக்குவிப்புத் திட்டத்தின்" கீழ் மாற்றுவதனை மேற்கொள்பவர்கள் ஐக்கிய அமெரிக்க டொலரொன்றிற்கு ரூ. 10.00 மேலதிக ஊக்குவிப்புத் தொகையொன்றினை 2022 சனவரி 31ஆம் திகதி வரை பெறுவார்கள்.

“பணிகள் ஏற்றுமதிகளிலிருந்தான" பெறுகைகள் என்பன வதிவற்றோருக்கான சுற்றுலா, தொழில்சார் நிபுணத்துவப் பணிகள் போன்றவற்றினை வழங்கும் இலங்கையில் வதிவுள்ளோரின் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களாகும். இப்பணிகள் ஏற்றுமதிகள் அனுமதிக்கப்பட்ட கழிவுகளுக்கான சீராக்கங்களின் பின்னர் எஞ்சிய ஏற்றுமதிப் பெறுகைகளின் மாற்றல் மீதான விதிகளுக்குட்பட்டனவாகவே அமையும். இப்பின்னணியில் ஏற்றுமதிப் பெறுகைகளின் மீளனுப்பல் மற்றும் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பான அண்மைய விதிகள் “பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியாளர்களுக்கு” மட்டுமே பொருந்துமென்பது தெளிவானதொன்றாக இருக்கும் என்பதுடன் அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளைச் செலுத்திய பின்னர் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளின் எஞ்சிய நிலுவைத் தொகையினை இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டுமென புதிய விதிகள்  தேவைப்படுத்துகின்றன. அத்தகைய அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகள் நடைமுறைக் கொடுக்கல்வாங்கல்கள், அனுமதிக்கப்பட்டவாறான வெளிநாட்டுச் செலாவணி எடுப்பனவு, படுகடன் தீர்ப்பனவுச் செலவுகள், பொருட்கள் மற்றும் பணிகளின் கொள்வனவு மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகளிலான முதலீடுகள் போன்றவற்றுடன் தொடர்புடைய வெளிமுகப் பணவனுப்பல்களாகக் காணப்படுகின்றன. இவ்வகையிலான பணிகள் ஏற்றுமதிப் பெறுகைகளுக்கான மாற்றல் விதிகள் இந்தியா, வங்காளதேசம், பாகித்தான் மற்றும் தாய்லாந்து போன்ற ஏனைய பிராந்திய நாடுகளிலும் விதிக்கப்படுகின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும்.

மேலும், அரசாங்கத்துடன் இணைந்து முன்னர் அறிவிக்கப்பட்டவாறு முறைசார் வழிகளினூடாக அனுப்பப்படும் நிதியை ஊக்குவிப்பதன் மூலம் தொழிலாளர் பணவனுப்பல்களின் மேம்பாட்டினைத் தொடர்ந்தும் வசதிப்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி வலியுறுத்துகிற அதே வேளையில் சட்டத்திற்கு விரோதமான நிதி மாற்றல்களில் ஈடுபடும் அனைத்து நபர்களுக்கு (அனுப்புவோரும் பெறுவோரும்) எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கமைய, பொது மக்கள் இத்தகைய பொய்யான தகவல்கள் மற்றும் வாக்குறுதிகளினால் தவறாக வழிநடத்தப்படாமல் விழிப்புடன் இருக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

உரிமம் பெற்ற வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வெளிநாட்டுச் செலாவணிப் பெறுகைகளின் மாற்றலுடன் தொடர்புடைய இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளைக் கட்டாயமாக கடைப்பிடிப்பதுடன் எந்தவொரு தவறான புரிதலையும் தவிர்க்கும் பொருட்டு அத்தகைய விதிகள் தொடர்பில் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய விதிகள் தொடர்பில் அறிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றன.

மேலதிக விவரங்களுக்கு:

- 2251/42ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிக்கமைய ஏற்றுமதிப் பெறுகைகளின் மாற்றல் (https://www.dfe.lk/web/images/rdevelopment/035fa8af3491e2f41c9e9756e69f2754-2251-42-E.pdf)

- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (https://www.dfe.lk/web/images/downloads/other/Rules_No.5%20-FAQs.pdf)

Published Date: 

Saturday, January 8, 2022