நாட்டிற்கு வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது கௌரவ நிதி அமைச்சரின் சம்மதத்துடனும் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இசைவாகவும் தனியார் துறையின் வலிமைகள் மீது உந்துசக்தியளிக்கின்ற கரைகடந்த நிதியளித்தலை திரட்டுவதற்கான வழிகளைப் பின்பற்றுமாறு தனியார் துறைக்கு அழைப்பு விடுக்கின்றது.
இது தொடர்பில், கரைகடந்த கடன்பாடுகள் பற்றிய வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வுக்கு காப்பளிப்பதற்கு வருடாந்தம் மீளாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படக்கூடிய சொல்லப்பட்ட கடன்பாடுகளின் காலப்பகுதிக்காக தனியார் துறையினரின் வெளிநாட்டுச் செலாவணி கடன்பெறுநர்களுக்காக செலவில்லாத பரஸ்பரப் பரிமாற்றல் ஒப்பந்த வசதியொன்று இலங்கை மத்திய வங்கி மூலம் கிடைக்கப்பெறச் செய்யப்படும்.
மற்றொருவழியாக கரைகடந்து திரட்டப்பட்ட ஐ.அ.டொலர் நிதியங்களை தனியார் துறை, உடனடியாக முன்னுறுகின்ற இலங்கை அபிவிருத்தி முறிகள் ஏலங்களில் நிர்ணயிக்கப்படும் நிறையேற்றப்பட்ட சராசரி நிலையான வீதத்திற்கு/ நிறையேற்றப்பட்ட சராசரி இலாபத்திற்கு அமைவாக அல்லது சந்தை இலங்கை அபிவிருத்தி முறிகளுக்கு நியமிக்கப்பட்ட பெயர்குறிக்கப்பட்ட முகவர்கள் ஊடாக பரஸ்பரம் இணங்கிய மட்டங்களில் கரைகடந்த கடன்பெறுதல் ஒப்பந்தக்காலத்துடன் பொருந்துகின்ற இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடு செய்யலாம்.
வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் வழங்கப்பட்ட பொதுவான நியதிகளின் பிரகாரம் அத்தகைய ஒழுங்குவிதிகளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகளுடன் இணங்கி வதியாதோர்களிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கு/வதியாதோர்களுக்கு படுகடன் சாதனங்களை வழங்குவதற்கு 2007ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படவேண்டிய கடன்களை பெறுவதற்கு உள்நாட்டு சொத்துக்களை வாக்குறுதியளிப்பதற்கும் கூட்டு நிறுவன உத்தரவாதங்களை வழங்குவதற்கும் விரும்புகின்ற சந்தர்ப்பத்தில் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு முன்வைக்கப்படுகின்ற எழுத்திலான விண்ணப்பத்தின் பேரில் வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் விசேட அனுமதியொன்றாக அத்தகைய தேவைப்படுத்தல்களுக்கு இடமளிக்கப்படலாம்.
மேலும், வெளிநாட்டிலிருந்து கடன்பெறுகின்ற தனியார் நிறுவனங்கள் 2021 மே 25ஆம் திகதியிடப்பட்ட 2229/5ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி (அதிவிசேட) அறிவித்தலில் வெளியிடப்பட்டவாறு வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 4(2)(இ) பிரிவின் கீழ் வழங்கப்பட்ட கட்டளையில் குறித்துரைக்கப்பட்ட நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு இலங்கையிலுள்ள அதன் துணை நிறுவனங்களுக்கு அத்தகைய நிதியங்களை துணை கடன் வழங்கலாம்.
மேற்குறிப்பிட்டவை மீது ஆர்வமுடைய ஏதேனும் கூட்டுநிறுவனம் www.dfe.lk/downloads என்ற இணையத்தளம் வாயிலாக அரசாங்க வர்த்தமானி (அதிவிசேட) அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட அனைத்து இயைபுடைய ஒழுங்குவிதிகளையும் கட்டளைகளையும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு மேலதிகமாக தற்போதைய வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகள் தொடர்பில் மேலதிகத் தகவல்களுக்கு அவர்கள் தமது வங்கியாளரை அல்லது வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினைத் தொடர்புகொள்ள முடியும்.