கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதங்கள்

கொவிட்-19இன் இரண்டாவது அலை காரணமாக வியாபாரங்களும் தனிநபர்களும் முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கடன் காலதாமதத்தினை 2020 ஒத்தோபர் 1 இலிருந்து ஆரம்பமாகும் ஆகக்கூடிய ஆறு மாத காலத்திற்கு நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி உரிமம்பெற்ற வங்கிகளைக் கேட்டுக் கொள்கின்றது. தகுதியுடைய கடன்படுநர்கள் 2020 நவெம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் கடன் காலதாமதத்திற்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  1. கடன் காலதாமதத்திற்கான காலம் உரிமம்பெற்ற வங்கிகளின் உள்ளக வழிகாட்டலின் அடிப்படையில் தகுதியுடைய கடன்படுநர்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சனைகளைக் கருத்திற்கொண்டு ஆறு மாத காலமாக அல்லது ஒரு குறுகிய காலப்பகுதியாக இருக்கும். கடன் காலதாமதம் மூலதனம் மற்றும் வட்டி ஆகிய இரண்டிற்குமாக வழங்கப்படலாம்.
  2. தகைமையுடைய கடன்படுநர்களில் கொவிட்-19 பரவலினால் நிதிப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அடையாளம் காணப்பட்ட வணிக துறைகளில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள், உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள், சுயதொழில் வணிகங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய வருமானமீட்டுவோர் உள்ளடங்குகின்றனர்.
  3. தகைமையுடைய கடன் வசதிகளானது, 2020 ஒத்தோபர் 01இல் செயற்படு கடன் பிரிவிலுள்ள ரூபாய் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவணைக் கட்டணக் கடன்கள், குத்தகை வசதிகள், அடகுபிடித்தல், மேலதிகப் பற்று, வர்த்தக நிதியிடல் மற்றும் சௌபாக்கியா கொவிட்-19 மீளெழுச்சி வசதி நீங்கலாக ஏனைய வசதிகளை உள்ளடக்குகின்றது.
  4. கடன் காலதாமதத்திற்கான கட்டமைப்பு

(அ) பொருத்தமான கடன் காலதாமதத்தில் நிலுவையாகவுள்ள மூலதனம் மற்றும் வட்டி தவணைக் கட்டணக் கடனாக மாற்றப்படும்.

(ஆ) அந்தந்த காலதாமதத்திற்குப் பின்னர் உடனடியாகக் கிடைக்கக்கூடிய 364 நாட்கள் திறைசேரி உண்டியலின் ஏல வீதத்தை விட அதிகரிக்காமல் அத்துடன் ஆண்டிற்கு 1 சதவீதத்தைக் கூட்டி இலங்கை ரூபாவில் குறிக்கப்பட்ட மீளமைக்கப்பட்ட கடன்களுக்கு வட்டியை அறவிட முடியும்.

(இ) வெளிநாட்டு நாணயக் கடன்களைப் பொறுத்தவரையில், மீளமைக்கப்பட்ட கடன்களுக்கான வட்டியாக தற்போதைய சந்தை வட்டியை விடக் குறைவாக அல்லது ஒப்பந்த வட்டி இவற்றில் குறைவான வட்டி வீதம் அறவிடப்படும்.

(ஈ) மேலதிகப் பற்று வசதியைப் பொறுத்தவரை, பொருத்தமான கடன் காலதாமத காலப்பகுதியில் நிலுவையாகவுள்ள வட்டியை தவணைக் கட்டண கடன் வசதியாக மாற்ற முடிவதுடன், ஆண்டிற்கு 4 சதவீதத்திற்கு மேற்படாத வட்டி வீதம் விதிக்கப்படும்.

(உ) அடகுக் கடன் வசதிகளின், கடன் காலதாமத காலப்பகுதியிலுள்ள நிலுவைத் திகதி 2021 ஏப்பிறல் 01 வரை நீடிக்கப்படும்.

(ஊ) கடனட்டைகள் தொடர்பில் தகைமையுடைய கடன்படுநரால் கோரப்படும் எந்தவிதமான சலுகைகளுக்கும் இணங்குவதற்கு, உரிமம்பெற்ற வங்கிகள் பொருத்தமான வியாபாரத் தீர்மானங்களை எடுக்கலாம்.

(எ) 2020 ஒத்தோபர் 01ஆம் திகதி வரை ஏதேனும் அபராத வட்டி நிலுவையாக செலுத்தப்படாது இருந்தால் அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பொதுமக்கள், கடன் காலதாமதம் தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற தத்தமது வங்கிகளைத் தொடர்பு கொள்ளுமாறும் கொவிட்-19 பரவலின் காரணமாக தங்கள் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் ஏதேனும் சவால்களை எதிர்கொண்டால் 2020 நவெம்பர் 30 இற்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தற்போதைய நோய்த்தொற்று நிலையினைக் கருத்திற்கொண்டு வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்குச் செல்வதைக் குறைப்பதற்கு, பாதிக்கப்பட்ட கடன்படுநர்கள் இச்சலுகைகளைப் பெறுவதற்கான கோரிக்கையினை மேற்கொள்வதற்காக அச்சிடப்பட்ட வடிவில் அத்துடன்/ அல்லது மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் உட்பட்ட இலத்திரனியலினூடாக வன் அல்லது மென் வடிவத்தில் தேவையான தகவல்களுடன் ஒரு இலகுவான படிவத்தினை வழங்குமாறு உரிமம்பெற்ற வங்கிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

வங்கிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையைக் கீழேயுள்ள இணைப்பின் மூலம் அடைய முடியும்.

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/laws/cdg/bsd_circular_No_10_of_2020_t.pdf

Published Date: 

Wednesday, November 11, 2020