இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதிக்கு நிதியிடல் தொடர்பான புலனாய்வுகளையும் வழக்குகள் தொடுபப்தற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைப் பெறுவதற்காக, இலங்கை மத்திய வங்கியில் 2016 செத்தெம்பர் 27ஆம் நாளன்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்து கொண்டது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு. எம்.என். ரணசிங்க அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு. எச். அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 

பணம் தூயதாக்கலும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலும் பன்னாட்டு ரீதியாக தொடர்புபட்ட நிதியியல் குற்றங்களாகும். இவை உலகளாவிய பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகவும் விளங்கக் கூடும். மேலும், மக்களினதும் பொருட்களினதும் எல்லை கடந்த நகர்வுகள் விரிவடைந்து வருவதன் காரணமாக பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடுதல் செயற்பாடுகளும் மிக நுட்பம் வாய்ந்த விதத்தில் அதிகரித்து வருவதுடன் அவற்றினை கண்டறிந்து கொள்வதும் இடர்ப்பாடானதாக மாறிவருகின்றது. எனவே நிதியியல் உளவறிதல் பிரிவிற்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குமிடையிலான உள்ளக இணைப்பும் ஒத்துழைப்பும் எல்லை கடந்த மக்கள் அல்லது பொருட்களின் சட்டத்திற்கு மாறான நகர்வுகளை தடைசெய்வதற்கும் ஒழிப்பதற்குமான இலங்கையின் முயற்சிகளை ஆழப்படுத்தவும் நாட்டில் ஒரு வலுவான எல்லைக்கட்டுப்பாட்டு முறைமையினை நிறுவவும் உதவும். 

நிதியியல் உளவறிதல் பிரிவு இலங்கைச் சுங்கத்துடன் இதேபோனற் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை  ஏற்கெனவே செய்துள்ள வேளையில், மேற்குறிப்பிட்ட நோக்கத்திற்காக மற்றைய தொடர்பான உள்நாட்டு அரச முகவர்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றது.

Published Date: 

Thursday, October 6, 2016