2018 ஏப்பிறலில் பணவீக்கம்

தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 மாச்சின் 2.8 சதவீதத்திலிருந்து 2018 ஏப்பிறலில் 1.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன் இது 2016 பெப்புருவரிக்குப் பின்னர் ஏற்பட்ட மிகக்குறைந்த அளவுமாகும். 2018 ஏப்பிறலின் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்க வீழ்ச்சியானது 2017 ஏப்பிறலின் போது உணவு வகையில் காணப்பட்ட பொருட்களின் விலைகளின் அதிகரிப்பினால் தோற்றுவிக்கப்பட்ட உயர்வான தளத்தின் மூலம் பிரதானமாத் தூண்டப்பட்டிருந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2018 மாச்சின் 6.7 சதவீதத்திலிருந்து 2018 ஏப்பிறலில் 6.1 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்தது. 
மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனையில் கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2018 மாச்சின் 122.8 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 ஏப்பிறலில் 122.9 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்தமைக்கு உணவல்லா விடயங்களில் குறிப்பாக, போக்குவரத்து (லங்கா ஐஓசியினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு); மற்றும் வெறிக் குடிவகைகள் மற்றும் புகையிலை என்பனவற்றின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே பெருமளவிற்குக் காரணமாக இருந்தது. அதேவேளையில், உணவு வகைகளில் குறிப்பாக, காய்கறிகள், பெரிய வெங்காயம் மற்றும் தேங்காய் என்பவற்றின் அதிகரிக்கப்பட்ட நிரம்பல் நிலைமைகளின் காரணமாக விலையில் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. 
பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2018 ஏப்பிறலில் 1.9 சதவீதமாக மாற்றமடையாதிருந்தது. அதேவேளை, ஆண்டுச் சராசரி தேசிய நுகர்வேர் விலைச் சுட்டெண் மையப் பணவீக்கம் 2018 மாச்சின் 3.6 சதவீதத்திலிருந்து 2018 ஏப்பிறலில் 3.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 

 

முழுவடிவம்

Published Date: 

Monday, May 21, 2018