குறிக்கோள்கள் 

இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்கள்

இலங்கை மத்திய வங்கி மாற்றமடைந்துவரும் பொருளாதார சூழலுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் அது உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் கவனத்தையும் தொழிற்பாடுகளையும் விருத்திசெய்து வருகிறது. மத்திய வங்கித் தொழிலின் போக்குகளுடன் ஒத்துச்செல்லும் விதத்தில் ஆரம்பத்தில் அதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பல்வேறு குறிக்கோள்களிலிருந்தும் அதனை விடுத்து இரண்டு மையக் குறிக்கோள்களை அது பின்பற்றுவதனை இயலச்செய்யும் விதத்தில் 2002இல் நாணய விதிச் சட்டத்திற்கு திருத்தங்களை மேற்கொண்டதன் மூலம் மத்திய வங்கியின் குறிக்கோள்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன. மத்திய வங்கியின் குறிக்கோள்களை முதன்மையாக எளிமைப்படுத்திய 2002இன் மேற்குறிப்பிடப்பட்ட திருத்தத்தைத் தவிர, நாணய விதிச் சட்டமானது கடந்த காலங்களில் முழுமையான மீளாய்வையும் திருத்தத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆகையினால், பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் மத்திய வங்கித்தொழிலின் ஒட்டுமொத்த பரிணாம வளர்ச்சி என்பவற்றின் விளைவாக உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கிணங்க நாணய விதிச் சட்டத்தின் பல எண்ணிக்கையிலான ஏற்பாடுகளை மீளாய்வுசெய்வதற்கான தேவைப்பாட்டுடன், 2023ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கிச் சட்டம் இயற்றப்பட்டது. மத்திய வங்கியின் சுயாதீனத்தை மேம்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிப்பதற்கும் அத்துடன் இலங்கையில் தொடர்ச்சியாக விலை உறுதிப்பாட்டைப் பேணுவதற்கான நாணயக் கொள்கை கட்டமைப்பை மீளவலுப்படுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கிச் சட்டம் விசேட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது.

இதற்கமைவாக, இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள்களும் மாற்றப்பட்டன.

மையக் குறிக்கோள்: “உள்நாட்டு விலை உறுதிப்பாட்டை அடைதலும் பேணுதலும்”

மற்றைய குறிக்கோள்: “நிதியியல் முறைமை நிலையுறுதியை உறுதிப்படுத்தல்”

இலங்கையின் உற்பத்தியாக்க மூலவளங்களின் அபிவிருத்தியை ஊக்குவித்து மேம்படுத்துகின்ற நோக்குடன் மத்திய வங்கி இவ்விரண்டு குறிக்கோள்களையும் கொண்டிருக்கிறது.

உள்நாட்டு விலை உறுதிப்பாடு

விலை உறுதிப்பாடானது, உள்நாட்டின் நாணயத்தின் நியதிகளிலும் வெளிநாட்டு நாணயங்களின் நியதிகளிலும் இது எவற்றைக் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்குமென்ற நாணயத்தின் பெறுமதியினைப் பாதுகாக்கிறது. விலை உறுதிப்பாடு அல்லது விலைகளின் உறுதித்தன்மை என்பதன் பொருள் குறைந்த பணவீக்கமாகும். பணவீக்கம் குறைவாக இருக்கும் பொழுதும் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படும் பொழுதும் பொருளாதாரம் நன்கு செயலாற்றும் என்பதனை அனுபவம் காட்டுகின்றது. இந்நிலைமைகளில் வட்டி வீதங்களும் குறைவாகவே இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையானது, பொருளாதாரம் அதன் வளர்ச்சி வாய்ப்புக்களை அடைவதற்கும் உயர் தொழில்வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கும் அனுமதிக்கிறது. உயர்வானதும் அடிக்கடி மாறுபடுவதுமான பணவீக்கத்தின் இடையூறு விளைவிக்கும் தாக்கம் இல்லாமையால் நுகர்வோரும் உற்பத்தியாளர்களும் நம்பிக்கையுடன் பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்ளமுடிகிறது. குறைந்த பணவீக்கம் அல்லது விலை உறுதிப்பாடானது உறுதித்தன்மை, நீண்ட கால பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நிலை என்பவற்றை ஊக்குவிக்கின்றது.  மத்திய வங்கி பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு நாணயக் கொள்கை வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றது.

நிதியியல் முறைமை உறுதிப்பாடு

உறுதியான நிதியியல் முறைமையானது வைப்பாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமான சூழலொன்றினை உருவாக்குவதன் மூலம் வினைத்திறன் மிக்க நிதியியல் இடையீடுகளையும் சந்தைகளின் காத்திரமான தொழிற்பாடுகளையும் ஊக்குவிக்கிறது, இதன்மூலம் முதலீட்டினையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது. நிதியியல் முறைமை உறுதிப்பாடென்பது நிதியியல் முறைமையின் காத்திரமான தொழிற்பாடு எனவும் (நிதியியல் நிறுவனங்கள் மற்றும் சந்தைகள்) வங்கித்தொழில், நாணயம் மற்றும் சென்மதி நிலுவை நெருக்கடிகள் இல்லாததொரு தன்மை எனவும் பொருள்படுகிறது. வங்கி முறிவடைதல், மிகையான சொத்து விலைத்தளம்பல்  மற்றும் சந்தைத் திரவத்தன்மை சிதைவடைதல் அல்லது கொடுப்பனவு முறைமைக்கான தடங்கல் என்பனவற்றின் காரணமாக நிதியியல் உறுதிப்பாடற்ற தன்மை ஏற்படுகிறது. நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்கு உறுதியான பேரண்டப் பொருளாதார சூழல், காத்திரமான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு, நன்கமைக்கப்பட்ட நிதியியல் சந்தைகள், ஆற்றல் வாய்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பானதும் உத்வேகம் நிறைந்ததுமான கொடுப்பனவு உட்கட்டமைப்பு என்பன தேவைப்படுத்தப்படுகின்றன. சந்தைகளையும் நிதியியல் நிறுவனங்களையும் கண்காணித்தல், கொடுப்பனவு முறைமைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணுதல் என்பனவூடாக நிதியியல் முறைமைக்குப் பொதுவாக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடைசெய்தல், கண்டுபிடித்தல் மற்றும் குறைத்தல் என்பனவற்றின் மூலம் நிதியியல் உறுதிப்பாடு பேணப்படுகின்றது.