வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2020 யூலை

2020 யூலையில் இலங்கையின் வெளிநாட்டுத் துறை, வணிகப்பொருட்களின் இறக்குமதிகளில் காணப்பட்ட குறைப்புக்களுக்கும் மத்தியிலும் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளில் காணப்பட்ட அதிகரிப்பு மற்றும் அதிகரித்த தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பனவற்றின் உதவியுடன் மேலும் மீட்சியடைந்தது. கொவிட்-19 தொற்றிற்கு மத்தியிலும் பல குறிப்பிடத்தக்க சாதனைகள் அவதானிக்கப்பட்டன. யூலையில் வணிகப்பொருட்களின் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் 2020 சனவரியின் பின்னர் முதற்றடவையாக ஐ.அ.டொலர் 1 பில்லியனை விஞ்சிக் காணப்பட்டதுடன் 2020 பெப்புருவரியின் பின்னர் முதற்றடவையாக நேர்க்கணியமான ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியையும் பதிவுசெய்தது. எதிர்பார்க்கப்பட்டவாறு, இன்றியமையாதனவல்லாத பொருட்களின் இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட தொடர்ச்சியான கட்டுப்பாடுகளின் காரணமாக வணிகப்பொருட்களின் இறக்குமதிகள் தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டன. 2020 யூலையில் தொழிலாளர் பணவனுப்பல்களில் கணிசமானளவு அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டதுடன் 2018 சனவரியின் பின்னர் மாதாந்தப் பணவனுப்பல்களில் மிக உயர்ந்த தொகையொன்று பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை, நாட்டின் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளின் மட்டம் சார்க் நிதியத்தின் பரஸ்பர பரிமாற்றல் வசதி பெறப்பட்டமையின் காரணமாக 2020 யூலை இறுதியில் ஐ.அ.டொலர் 7.1 பில்லியனுக்கு அதிகரித்தது. உள்நாட்டு வெளிநாட்டு செலாவணிச் சந்தைக்கான தேறிய உட்பாய்ச்சல்கள் செலாவணி வீதத்தின் மீதான அழுத்தத்தினை தளர்த்தியதுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளைக் கட்டியெழுப்புவதற்காக தேறிய அடிப்படையில் வெளிநாட்டுச் செலாவணியை ஈர்த்துக் கொள்வதற்கு மத்திய வங்கியை இயலுமைப்படுத்தியது. அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை என்பனவற்றிலிருந்தான வெளிநாட்டு வெளிப்பாய்ச்சல்கள் இம்மாத காலப்பகுதியில் தொடர்ந்தும் காணப்பட்ட போதும் அவை ஒப்பீட்டு ரீதியில் குறைந்த மட்டங்களிலேயே இருந்தன. 2020 யூலை மாதத்தில் இலங்கை ரூபா உறுதியடைந்து சிறிதளவு உயர்வினைப் பதிவுசெய்தது.

 

முழு வடிவம்

Published Date: 

Monday, September 14, 2020