பன்னாட்டு நாணய நிதியம், விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ், ஐ.அ.டொலா் 252 மில்லியன் கொண்ட ஐந்தாவது தொகுதியை விடுத்திருக்கிறது

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, இலங்கையுடனான 2018 உறுப்புரை IV ஆலோசனைகளை முடித்துக் கொண்டதுடன் மூன்றாண்டு விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் நான்காவது மீளாய்வினை நிறைவு செய்துள்ளதுடன் சிஎஉ 177.774 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 252 மில்லியன்) கொண்ட ஐந்தாவது தொகுதியினை விநியோகிப்பதற்கும் ஒப்புதலளித்தது. விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது சென்மதி நிலுவைக்கும் அரசாங்கத்தின் பரந்த பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்திற்கும் உதவியளிப்பதனை நோக்கமாகக் கொண்டிருந்தது.
ப.நா. நிதியமானது இறைத்திரட்சி, முன்மதியுடைய நாணயக் கொள்கை மற்றும் அமைப்பியல் சீர்திருத்தங்கள் ஆகிய மேம்பட்ட கலப்புக் கொள்கையினூடாக பொருளாதாரத்தினை உறுதிப்படுத்துவதற்கும் வளர்ச்சிக்கு உதவுவதற்கும் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறது. ப.நா. நிதியமானது புதிய உண்ணாட்டரசிறைச் சட்டம், தன்னியக்கப்படுத்தப்பட்ட எரிபொருள் விலையிடல் சூத்திரம், நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலுக்கான இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல் என்பனவற்றை நிறைவேற்றியமை உள்ளிட்ட அமைப்பியல் சீர்திருத்தங்கள் என்ற நியதிகளில் அடையப்பட்ட முக்கிய மைல்கற்களுக்காக அதிகாரிகளைப் பாராட்டிய வேளையில், முன்னோக்கிச் செல்கின்ற சீர்திருத்த உத்வேகத்தினை நிலைத்திருக்கச் செய்வதன் முக்கியத்துவத்தினையும் வலியுறுத்துகின்றது.
ஐந்தாவது தொகுதி விநியோகிக்கப்பட்டதுடன் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஒழுங்கின் கீழான மொத்த விநியோகம் சிஎஉ 715.23 மில்லியனுக்கு (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1,014 மில்லியன்) சமமானதாகக் காணப்பட்டது. தொடர்ச்சியாகக் கிடைத்த விரிவாக்கப்பட்ட நிதிய வசதியானது வெளிநாட்டு ரீதியான தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதற்கும் பேரண்ட பொருளாதார உறுதிப்பாட்டினை மேம்படுத்துவதற்கும் நாட்டிற்கு உதவியதுடன் அதன் மூலம் நடுத்தர காலப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்ற வேளையில் சந்தையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது.

Published Date: 

Monday, June 4, 2018